எலுமிச்சை விலை தாறுமாறாக உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி! கிலோ ரூ.300-ஐ தொட்டது!
வரத்து குறைந்ததால், எலுமிச்சை பழம் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.300-க்கு விற்பனை ஆகிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் பருவநிலை, நீர் வரத்து மற்றும் நிலத்தடி நீர் இருப்புக்கு ஏற்ப குறுகிய, மத்திய மற்றும் நீண்டகாலப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. காய்கறிகள், கீரை வகைகள், தென்னை, வாழை, கரும்பு, சப்போட்டா, கொய்யா ஆகியவற்றுடன் எலுமிச்சையும் சில பகுதிகளில் முக்கியப் பயிராக விளங்குகிறது.
இங்கு ராஜகனி எனும் வகையில் ஜூலை முதல் டிசம்பர் வரை அதிக மகசூல் கிடைக்கிறது. ஏக்கருக்கு 160 செடிகள் வரை நட்டு கூடுதல் வருவாய் ஈட்ட முடியும். சமவெளிப் பகுதிகளில் செடிவகை, மலைப்பிரதேசங்களில் கொடிவகை என வேறுபடுத்தி சாகுபடி செய்யப்படுகிறது. நடவு செய்த மூன்றாம் ஆண்டிலேயே அறுவடைக்குத் தயாராகிவிடும். அன்றாட உணவில் எலுமிச்சம் பழத்தின் பயன்பாடு அதிகமாக இருப்பதால் ஆண்டு முழுவதும் தேவை தொடர்ந்து உள்ளது.
வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த எலுமிச்சை பித்தம், தலைவலி, மலச்சிக்கல், தொண்டை வலி ஆகியவற்றைப் போக்குவதோடு கிருமிகளை அழித்து அஜீரணப் பிரச்சினையையும் தீர்க்கும். கோடையில் எலுமிச்சை சாறுடன் உப்பு மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து தயாரிக்கும் பானகம் உடல் நீர்ச்சத்தைப் பராமரிக்க உதவுகிறது. இதனால் பல விவசாயிகள் இந்தப் பயிரை விரும்பித் தேர்ந்தெடுக்கின்றனர்.
இதையும் படிங்க: விண்ணைத் தொடும் மளிகைப் பொருட்கள் விலை..!! அதிகரிக்கும் குடும்பச் செலவு!! திண்டாடும் மக்கள்..!!
ஆனால் பருவம் தவறிய மழை மற்றும் பருவநிலை மாற்றத்தால் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சந்தைகளுக்கு வரத்து குறைந்ததால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் கிலோ ரூ.100 முதல் 150 வரை விற்ற எலுமிச்சை தற்போது கிலோ ரூ.300 வரை விற்பனையாகிறது.
உள்ளூர் வியாபாரிகள் கூறுகையில், “உடுமலையை விட கிழக்கு மாவட்டங்களில் எலுமிச்சை சாகுபடி அதிகம். தென்காசி மாவட்டம் புளியங்குடி, திண்டுக்கல் மாவட்டம் திருமலை, ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய பகுதிகளிலிருந்து கொண்டுவந்து மொத்த விற்பனை செய்கிறோம். வரத்து குறைவாக இருப்பதால் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது” என்றனர்.
குமரலிங்கம் பகுதியில் கிலோ ரூ.220 வரை விற்பனையாகிறது.விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பருவநிலை தாக்கத்தை எதிர்கொள்ள புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் நீர் மேலாண்மையை வலியுறுத்தி வருகின்றனர். நுகர்வோரும் அதிக விலையை எதிர்கொள்ளும் நிலையில், சந்தை நிலவரம் கவனமாகக் கண்காணிக்கப்பட வேண்டும்.
இதையும் படிங்க: விலைவாசி உயர்வு அரசின் கையாலாகாத்தனம்! தவெக அரசை சாடிய டிடிவி தினகரன்!