சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்க விழா எப்போது?... தேதி குறித்த முதலமைச்சர் விஜய்...!
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தை முதல்வர் விஜய் நாளை மாலை சென்னையில் தொடங்கி வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மே 10 ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட முதலமைச்சர் ஜோசப் விஜய் , சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து, அதிரடிப் படையின் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார். இந்த படையில் மேலும், ஒரு எஸ்.பி. 2 டிஎஸ்பி, மற்றும் 4 ஆய்வாளர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பெண் அதிரடிப் படையில் இடம்பெறும் பெண் போலீஸார் மற்றும் பெண் எஸ்.ஐ.களுக்கு நேவி ப்ளூ நிற சட்டை - காக்கி பேன்ட் என்ற சிறப்பு சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கருப்பு தொப்பி, கருப்பு ஷூ என பார்ப்பதற்கு மிடுக்காக காணப்படும் வகையில் இந்த சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களிலும், இணைய வழியிலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுப்பதே இந்த அதிரடிப்படையின் முதன்மையான நோக்கமாகும். பேருந்து நிறுத்தங்கள், இரயில் நிலையங்கள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் (IT Parks), கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அவசரக் காலங்களில் உடனடி விரைவுப் பாதுகாப்பு வழங்குவது முக்கியமாகும்.
இதையும் படிங்க: பிலிப்பைன்ஸில் 8.2 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம்... அலறியடித்து ஓடிய மக்கள்... அண்டை நாடுகளுக்கு பறந்த சுனாமி எச்சரிக்கை...!
ஆனால் தொடர்ந்து 2 முறை இதன் தொடக்க விழா தள்ளிப்போயுள்ளது. அதில் ஒன்று, மே 27 ஆம் தேதி நடைபெற இருந்த விழா, டெல்லியில் பிரதமர் மோடியை முதலமைச்சர் விஜய் சந்திக்கப் போனதால் தள்ளிப்போனது. அதற்கு அடுத்து சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் விஜய் கடந்த 29-ம் தேதி தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் கடைசி நேரத்தில் இந்த நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டது.
கடந்த வாரம் திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை அடுத்த வாரம் தொடங்கி வைக்கப்படும்’ என்று அறிவித்தார். அதன்படி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நாளை (ஜூன் 9) மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்வில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: பெரம்பூர் சூட்கேஸில் உடல்... செங்கல்பட்டில் தலை... தமிழகத்தையே உலுக்கிய கொலையில் வெளியான பகீர் உண்மை...!