திமுக தயவில் முதன்முறையாக எம்.பி-யாகும் தேமுதிக! முதலமைச்சர் ஸ்டாலினிடம் எல்.கே. சுதீஷ் நேரில் வாழ்த்து!
தேமுதிக சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வான எல்.கே.சுதீஷ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.
தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு (Rajya Sabha) காலியாகவுள்ள 6 இடங்களுக்கான தேர்தலில், தேமுதிக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொருளாளர் எல்.கே. சுதீஷ் அவர்கள் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, இன்று அவர் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களால் தொடங்கப்பட்ட தேமுதிக, தனது 21 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் முதன்முறையாக நாடாளுமன்றத்தின் மேலவைக்கு (Rajya Sabha) நுழைகிறது. தற்போது சட்டமன்றத்தில் ஒரு உறுப்பினர் கூட இல்லாத நிலையில், திமுக தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த இடத்தை தேமுதிக-வுக்கு வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: "திமுகவிடம் 3 தொகுதிகள் வேண்டும்": அண்ணா அறிவாலயத்தில் அதிமமுக அதிரடி கோரிக்கை!
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்ட 'மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில்' தேமுதிக கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி இணைந்தது. தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, தேமுதிக-வுக்கு ஒரு ராஜ்யசபா எம்பி இடத்தை ஒதுக்க முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்புக்கொண்டார்.
தமிழகத்தில் காலியான 6 இடங்களுக்கு திமுக சார்பில் 2, காங்கிரஸ் 1, தேமுதிக 1 மற்றும் அதிமுக கூட்டணி சார்பில் 2 என மொத்தம் 6 வேட்புமனுக்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டன. இதனால் மார்ச் 9-ஆம் தேதி எல்.கே. சுதீஷ் உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி எல்.கே. சுதீஷ் முறைப்படி மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்க உள்ளார். அவரது பதவிக்காலம் 2032 ஏப்ரல் 2 வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம்! எடப்பாடி பழனிசாமி மாஸ் அறிவிப்பு!