அன்புமணிக்கு எதிரான வழக்கிற்கு தடை! பாமக உட்கட்சி மோதலில் உயர்நீதிமன்றம் உத்தரவு!
வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக இணைக்கக் கோரி அன்புமணி ஆதரவாளர் வடிவேல் இராவணன் தொடர்ந்த மனுவை உயர்நீதிமன்றம் ஏற்று கொண்ட நீதிபதிகள், அவரை வழக்கில் இணைக்க அனுமதி அளித்தனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் (PMK) பெயர், கொடி மற்றும் சின்னம் ஆகியவற்றை அன்புமணி ராமதாஸ் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தரப்பு தொடர்ந்த வழக்கின் விசாரணைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்துள்ளது.
பாமக-வின் உரிமை தொடர்பாகச் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்த வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி அன்புமணி தரப்பு உயர்நீதிமன்றத்தை அணுகியது. அதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்ற வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இதற்கிடையில், இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக இணைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தரப்பைச் சேர்ந்த பாமக பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அவரை வழக்கில் இணைக்க அனுமதி அளித்தனர்.
இதையும் படிங்க: அரசியல் சதுரங்கம்! தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் - சசிகலா சந்திப்பு!
வடிவேல் இராவணனின் மனு குறித்து மருத்துவர் ராமதாஸ் தரப்பு தங்களது பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்தது.
கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் அன்புமணி ராமதாஸின் பதவிக்காலம் முடிந்த பிறகும், அவர் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்துத் தேர்தல் ஆணையத்திடம் 'மாம்பழம்' சின்னத்தைப் பெற்றதாக ராமதாஸ் தரப்பு குற்றம் சாட்டி வருகிறது.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான இந்தச் சின்னம் மற்றும் கட்சி உரிமைப் போர் பாமக தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பெண்களின் சாபம் திமுகவை வீழ்த்தும்! பாமக மகளிர் சங்க பொதுக்குழுவில் சௌமியா அன்புமணி ஆவேசம்!