×
 

"கைதிகளுக்கும் உரிமைகள் உண்டு!" சிறை ஆய்வு விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!

சிறைகளில் அலுவல் சாரா உறுப்பினர்கள் குழு ஆய்வு செய்ததா எனத் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அலுவல் சாரா உறுப்பினர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளதா என்றும், அவர்கள் சிறைகளுக்குச் சென்று ஆய்வு நடத்தியுள்ளனரா என்றும் கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரை கிளை, இது குறித்துத் தமிழக தலைமைச் செயலாளர் விரிவான பதில் மனுத் தாக்கல் செய்ய அதிரடி உத்தரவிட்டுள்ளது.

மக்கள் கண்காணிப்பகத்தின் அமைப்பாளர் ஹென்றி திபேன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில், தமிழ்நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் அலுவல் சாரா உறுப்பினர்களை (Non-Official Visitors) நியமித்து, அவர்கள் மூலமாகச் சிறைச்சாலைகளில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடக் கோரி கடந்த 2017-ஆம் ஆண்டு மனுத் தாக்கல் செய்திருந்தேன். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, அனைத்துச் சிறைகளிலும் அலுவல் சாரா உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க உத்தரவிட்டது. ஆனால், பல ஆண்டுகள் ஆகியும் இந்த உத்தரவை மாநில அரசு மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் நடைமுறைப்படுத்தவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நீதிமன்ற அவமதிப்பு மனு, நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறைத்துறை கூடுதல் தலைமை இயக்குநர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தை ஆய்வு செய்த நீதிபதிகள், அதில் அலுவல் சாரா பார்வையாளர்களின் விவரங்கள் முழுமையாக இடம்பெறவில்லை என்பதையும், அவர்கள் சிறைகளுக்குச் சென்று நேரில் ஆய்வு நடத்தியதற்கான எந்தவிதத் தகவல்களும் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினர்.

இதையும் படிங்க: தாமிரபரணி ஆற்றில் ஆடைகள் எறிய தடை... மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. மதுரை கிளை எச்சரிக்கை!

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அலுவல் சாரா குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் சிறைச்சாலைகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி, அங்குள்ள சிறைக் கைதிகளின் குறைகள் மற்றும் அடிப்படைத் தேவைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அந்த நடைமுறைச் சரியாகப் பின்பற்றப்படவில்லை என்று வாதிட்டார்.

வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், தண்டனை பெற்ற கைதிகளாக இருந்தாலும் அவர்களுக்கும் அடிப்படை உரிமைகள் உண்டு. அவர்கள் இந்த நாட்டின் குடிமக்களாக அங்கீகரிக்கப்பட வேண்டியவர்கள் என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டனர்.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அலுவல் சாரா உறுப்பினர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளதா? அக்குழுவினர் சிறைச்சாலைகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனரா? என்பதைத் தமிழக தலைமைச் செயலாளர் நேரில் உறுதி செய்து விரிவான பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையைத் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: முதல்வருக்கு ஒரு நீதி, சீமானுக்கு ஒரு நீதியா? காவல்துறையை வெளுத்து வாங்கிய மதுரை உயர் நீதிமன்றம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share