×
 

மூன்றாவது பிரசவத்திற்கும் ஓராண்டு விடுப்பு தர வேண்டும்! தமிழக அரசின் அரசாணையை நிராகரித்த உயர் நீதிமன்றம்!

மூன்றாவது பிரசவத்திற்கு வெறும் 12 வாரங்கள் மட்டுமே மகப்பேறு விடுப்பு வழங்கும் தமிழக அரசின் அரசாணையை ஏற்க முடியாது எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இதற்கும் ஓராண்டு விடுப்பு வழங்க வேண்டும் என அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மூன்றாவது பிரசவத்திற்கு வெறும் 12 வாரங்கள் மட்டுமே மகப்பேறு விடுப்பு வழங்க அனுமதிக்கும் தமிழக அரசின் அரசாணையை ஏற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஓராண்டு விடுப்பு வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளுக்கு இந்த அரசாணை முரணானது என நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மோட்டார் வாகன இழப்பீட்டுத் தீர்ப்பாயத்தில் பணியாளராக உள்ள சாயி நிஷா என்பவர், தனது மூன்றாவது பிரசவத்திற்காக ஓராண்டு மகப்பேறு விடுப்பு கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால், தமிழக அரசின் நடைமுறையிலுள்ள அரசாணையைச் சுட்டிக்காட்டி, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி அவருக்கு ஓராண்டு விடுப்பு வழங்க மறுத்துவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சாயி நிஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார் மற்றும் என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, மகப்பேறு விடுப்பு என்பது ஒரு பெண்ணின் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்திப் பின்வரும் கருத்துக்களைத் தெரிவித்தனர்:

இதையும் படிங்க: "தோல்வியையும் ஏற்கும் மனப்பக்குவம் வேண்டும்!" - அரசியல் தலைவர்களுக்கு முன்னாள் நீதிபதி கிருபாகரன் கோரிக்கை!

முதலாவது மற்றும் இரண்டாவது பிரசவத்தின் போது ஒரு பெண் அனுபவிக்கும் அதே வேதனையையும், வலியையும் தான் மூன்றாவது பிரசவத்திலும் அனுபவிக்கிறார். இதில் பாகுபாடு காட்ட முடியாது.

மூன்றாவது பிரசவத்திற்கு 12 வாரங்கள் மட்டுமே விடுப்பு வழங்கலாம் என்ற தமிழக அரசின் அரசாணை, ஏற்கனவே நீதிமன்றங்கள் வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு எதிரானது. எனவே அதனை ஏற்க முடியாது.

நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மனுதாரர் சாயி நிஷாவுக்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்கி ஒரு வாரத்திற்குள் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதிக்கு உத்தரவிட்டனர். இந்தத் தீர்ப்பு தமிழக அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கு, குறிப்பாக மூன்றாவது பிரசவத்தை எதிர்நோக்குபவர்களுக்கு மிகப்பெரிய சட்டப் பாதுகாப்பாக அமைந்துள்ளது. மக்கள் தொகை கட்டுப்பாட்டு விதிகளைக் காரணம் காட்டிப் பெண்களின் உடல்நலம் மற்றும் மகப்பேறு உரிமைகளைப் பறிக்க முடியாது என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளது.

இதையும் படிங்க: "சாதி, மதம் அற்றவர்" - நீதிமன்ற உத்தரவுப்படி சான்றிதழ் பெற்றார் நடிகர் பார்த்திபன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share