×
 

"தோல்வியையும் ஏற்கும் மனப்பக்குவம் வேண்டும்!" - அரசியல் தலைவர்களுக்கு முன்னாள் நீதிபதி கிருபாகரன் கோரிக்கை!

தேர்தல் முடிவுகளில் வெற்றி பெற்றால் கொண்டாடுங்கள், தோல்வியடைந்தால் அடுத்த தேர்தலுக்குத் தயாராகுங்கள் எனத் தமிழக அரசியல் தலைவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி என். கிருபாகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், மக்களிடையே நிலவும் அதீத அரசியல் வெறி மற்றும் உணர்ச்சிவசப்படும் போக்கு குறித்துச் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி என். கிருபாகரன் கவலை தெரிவித்துள்ளார். அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இது குறித்து உடனடியாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை பாரிமுனையில் உள்ள 'சென்னை ஹவுசில்' செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் நீதியரசர் என். கிருபாகரன், தேர்தல் காலத்தில் மக்கள் நடந்துகொள்ளும் விதம் குறித்துப் பேசியதாவது, இளைஞர்கள் தங்கள் தலைவர் தான் வெற்றி பெற வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். ஒரு பெண்மணி 'தனது தலைவர் வெற்றி பெறாவிட்டால் குழந்தைகளைக் கொன்றுவிடுவேன்' என்று பேசும் வீடியோவைப் பார்க்கும்போது பயமாக இருக்கிறது. இந்த மனநிலை சமூகத்திற்கு ஆரோக்கியமானது அல்ல.

 

வெற்றி பெற்றால் கொண்டாடுங்கள், தோல்வியடைந்தால் அதனை ஏற்றுக்கொண்டு அடுத்த தேர்தலுக்குத் தயாராகுங்கள். இதனை வலியுறுத்தி அனைத்து அரசியல் தலைவர்களும், சினிமா நட்சத்திரங்களும், கிரிக்கெட் வீரர்களும் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே அறிக்கை வெளியிட வேண்டும். குழந்தைகளும் இளைஞர்களும் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். பல பெரும் தலைவர்களே தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர், எனவே வெற்றி-தோல்வியைச் சமமாகப் பார்க்கப் பழக வேண்டும்.

இதையும் படிங்க: "பதற்றம் வேண்டாம்.. தாராளமாக கிடைக்கும்": எரிபொருள் இருப்பு குறித்து எண்ணெய் நிறுவனங்கள் முக்கிய அறிவிப்பு!

செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், "நான் எந்தக் கட்சிக்கும் சார்பானவன் அல்ல. நான் சொல்லும் கருத்துக்கள் தவெக தலைவர் விஜய்க்கு மட்டுமானது அல்ல, ஒட்டுமொத்த அரசியல் சூழலையும் கருத்தில் கொண்டே பேசுகிறேன். ஒரு நடிகரை ரசிக்கலாம், அவர் படத்தை ரசிக்கலாம். ஆனால் தேர்தல் முடிவு என்பது மக்களின் கையில் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்," என்று தெளிவுபடுத்தினார்.

தமிழகத்தில் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்த அவர், தேர்தல் ஆணையம் இது போன்ற விவகாரங்களைக் கையாளச் சேவை மையங்களை உருவாக்க வேண்டும் என்றும், பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்திலேயே தேர்தல் நடைமுறைகள் குறித்த பாடங்களைச் சேர்க்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார். சமூக வலைதளங்களில் பரவும் உணர்ச்சிகரமான செய்திகளால் இளைஞர்கள் தவறான பாதைக்குச் செல்வதைத் தடுக்க வேண்டும் என்பதே அவரது பிரதான கோரிக்கையாக இருந்தது.

இதையும் படிங்க: தமிழகத்தில் கொளுத்தும் வெயில்! திருச்சியில் 105°F பதிவு - 11 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டியது வெப்பம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share