ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி எங்கே? தெற்கு ரயில்வேக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கான வசதிகளை மேம்படுத்தக் கோரிய வழக்கில் ரயில்வே நிர்வாகம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து செல்லும் வகையில் உள்கட்டமைப்புகள், நடைமேடைகள், டிக்கெட் முன்பதிவு மையங்கள் மற்றும் ரயில் பெட்டிகளைச் சிறப்பு வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும் என்று தொடரப்பட்ட பொதுநல வழக்கில், தெற்கு ரயில்வே நிர்வாகம் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் தடையின்றிப் பயணிப்பதற்கான சாய்தளப் பாதைகள் (Ramp), பேட்டரி கார்கள், சக்கர நாற்காலிகள், அவர்களுக்கேற்ற பிரத்யேக கழிப்பறை வசதிகள் மற்றும் தாழ்தள முன்பதிவு கவுன்டர்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் உள்ளன. எனவே, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டத்தின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களின் உள்கட்டமைப்புகள் மற்றும் ரயில் பெட்டிகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக வசதிகளை முழுமையாக மேம்படுத்தித் தர உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தலைமை நீதிபதி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தென் மாவட்டங்களின் மிக முக்கியமான சந்திப்புகளான மதுரை மற்றும் திண்டுக்கல் போன்ற பெரிய ரயில் நிலையங்களில் கூட நடைமேடைகளில் முதியவர்களையும் மாற்றுத்திறனாளிகளையும் பாதுகாப்பாக அழைத்துச் செல்லத் தேவையான அடிப்படைச் சக்கர நாற்காலி வசதிகள் கூடக் கிடையாது என்று வாதிட்டு, அதற்கான புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதையும் படிங்க: இடும்பன் கோவில் நகைகளை மீட்காவிட்டால் சிபிஐ விசாரணை! உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை!
மனுதாரரின் குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக விளக்கம் அளிக்க முடியாத ரயில்வே நிர்வாகத்தின் வழக்கறிஞர், குறிப்பிட்ட மனு தொடர்பாகத் தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் உரிய விளக்கம் பெற்று விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்யக் கால அவகாசம் வேண்டும் என்று கோரினார். ரயில்வே தரப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுதாரர் எழுப்பியுள்ள பிரச்சினைகள் குறித்து முழுமையான விளக்கங்களுடன் பதில் மனு தாக்கல் செய்யுமாறு ரயில்வே துறைக்கு உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: பிளான் பண்ணிட்டீங்களா? தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்! சென்னை மக்களே அலர்ட்!