டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் வாழ்வாதார பிரச்சனை! உயர் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!
மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் குத்தகைத் தொகையைத் திரும்ப அளிப்பது தொடர்பாகத் தமிழக அரசு 2 வாரங்களில் முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் நோக்கிலும், பெண்களின் கோரிக்கையை ஏற்றும் முதற்கட்டமாக 717 அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை மூட முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவின் கீழ் மாநிலம் முழுவதும் கடைகளுக்குப் பூட்டு போடப்பட்டு வரும் நிலையில், இம்முடிவால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜேஷ், கண்ணன் உள்ளிட்ட டாஸ்மாக் பார் குத்தகைதாரர்கள் பலர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.
அவர்கள் தங்களது மனுவில், அரசு மூட உத்தரவிட்டுள்ள டாஸ்மாக் கடைகளில் சிற்றுண்டிகளை விற்பனை செய்யவும், காலி பாட்டில்களைத் திரும்பப் பெறவும் நாங்கள் முறைப்படி லட்சக்கணக்கில் குத்தகைத் தொகை செலுத்திப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அரசின் இந்தத் திடீர் முடிவால் எங்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எங்களது அதிகாரப்பூர்வக் குத்தகைக்காலம் முடியும் வரை சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடக்கூடாது என உத்தரவிட வேண்டும்; அல்லது கடைகள் மூடப்பட்ட நாட்களுக்கான குத்தகைத் தொகையை அரசு எங்களுக்குத் திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும் எனத் தங்களது கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.
இதையும் படிங்க: கள்ளச் சந்தையில் மது... தடுக்க தவறிய திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..! அதிரடி நடவடிக்கை.!!
இந்த பரபரப்பான வழக்கை இன்று விசாரித்த நீதியரசர் பரத சக்கரவர்த்தி, குத்தகைதாரர்களின் மனுவை முடித்து வைத்து ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கினார். நீதிபதி தனது உத்தரவில், பொதுமக்களின் நலன் கருதி மதுக்கடைகளை மூட அரசு தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றமே தெளிவுபடுத்தியுள்ளது.
மதுக்கடைகளை மூடும் தமிழக அரசின் கொள்கை முடிவு பல்வேறு தரப்பிலும் வரவேற்கத்தக்கது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. அதேநேரம், கடைகள் மூடப்பட்டதால் வணிகத்தை இழந்த குத்தகைதாரர்களுக்கு, கடை திறக்கப்படாத நாட்களுக்கான தொகையைத் திரும்ப அளிப்பது தொடர்பாகத் தமிழக அரசு உரிய முறையில் பரிசீலனை செய்ய வேண்டும்; இதுகுறித்து இன்னும் 2 வார காலத்திற்குள் முறையான முடிவை அரசு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு, தவெக அரசின் மதுவிலக்கு நகர்வில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்றால் கடும் நடவடிக்கை! டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை!