தமிழ்நாட்டின் காவல்துறைக்கு புதிய டிஜிபி... ஐபிஎஸ் மகேஷ் குமார் அகர்வால் நியமித்து தமிழக அரசு உத்தரவு!
தமிழக காவல்துறையின் புதிய தலைமை இயக்குநராக (டிஜிபி) மூத்த ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் குமார் அகர்வாலை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக காவல்துறையில் குற்றப் பின்னணிகளைத் துவம்சம் செய்ததிலும், சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதிலும் தனி முத்திரை பதித்த 1994ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான மகேஷ் குமார் அகர்வால், பஞ்சாப் மாநிலம் பத்திண்டாவில் பிறந்தவர் ஆவார். 46 வயதான இவர் சட்டப்பிரிவில் பி.ஏ. பட்டமும், வழக்கறிஞருக்கான சட்டப்படிப்பும் முடித்து, சட்டம் குறித்த ஆழமான அறிவோடு காவல்துறைக்குள் நுழைந்தவர். தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளில் அசாத்திய புலமை பெற்ற இவர், தேனி மாவட்டத்தில் இளம் எஸ்பியாகத் தனது காக்கிச் சட்டைப் பயணத்தைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து, சென்னை பூக்கடை துணை ஆணையராக 3 ஆண்டுகள், சென்னை போக்குவரத்து போலீஸ் துணை ஆணையர் மற்றும் தூத்துக்குடி எஸ்பி எனப் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் முத்திரை பதித்தார். பின்னர் மத்தியப் புலனாய்வு அமைப்பான சிபிஐ-யில் அயல்பணியாக 7 ஆண்டுகள் பணியாற்றி பஞ்சாப், ஹரியானா, இமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களின் முக்கிய வழக்குகளைத் துலக்கிய அனுபவம் மிக்கவர்.
தமிழக காவல்துறைக்குத் திரும்பிய பின், சிபிசிஐடி டிஐஜி, சென்னை நகர கூடுதல் கமிஷனர் (தெற்கு), மதுரை போலீஸ் கமிஷனர் மற்றும் சிபிசிஐடி ஐஜியாகப் பல அதிரடிப் பணிகளை மேற்கொண்டார். குறிப்பாக, சென்னை நகர கூடுதல் கமிஷனராக இருந்தபோது, அப்போதைய கமிஷனர் விஸ்வநாதனின் கனவுத் திட்டமான சென்னை நகர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் திட்டத்தில் வலது கரமாகச் செயல்பட்டுச் சாதித்துக் காட்டினார். பூக்கடை துணைக்கமிஷனராக இருந்த சமயத்தில் இவர் அறிமுகப்படுத்திய "நைட் கிரைம் டு ஜீரோ" என்ற இரவு ரோந்துத் திட்டம் வடசென்னையில் குற்றங்களை முற்றிலுமாகக் குறைத்தது. போக்குவரத்துப் பிரிவிலும் விபத்துக்களைக் கணிசமாகக் குறைத்து, மெச்சத்தகுந்த பணிக்காக முதல்வரின் பதக்கத்தையும் வென்றார். பின்னர் ஏடிஜிபியாகப் பதவி உயர்வு பெற்று ஆபரேஷன்ஸ் பிரிவிலும், சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வடக்கு மண்டலத்திலும் திறம்படப் பணியாற்றினார்.
தமிழகத்தை உலுக்கிய சேலம் ஓடும் ரயில் கொள்ளை வழக்கில் துப்புலக்கி கொள்ளையர்களைக் கைது செய்தது, இந்து அமைப்புகளின் தலைவர்கள் படுகொலை வழக்கில் 3 தீவிரவாதிகளை வளைத்தது, சிறுசேரி பெண் பொறியாளர் கொலை வழக்கு, சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கு, வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது வழக்கு, வேலூர் ராணிப்பேட்டை தோல் சுத்திகரிப்பு ஆலை விபத்து வழக்கு மற்றும் பொட்டு சுரேஷ் கொலை வழக்கு எனப் பட்டியல் நீளும் அளவுக்குத் தமிழகத்தின் மிக முக்கிய மற்றும் சவாலான வழக்குகளைத் திறம்படக் கையாண்டு நன்மதிப்பைப் பெற்றவர். பழகுவதற்கு இனிமையானவர், அதேசமயம் ஊழல் கறையற்ற நேர்மையான அதிகாரி என்று சக அதிகாரிகளால் போற்றப்படும் மகேஷ் குமார் அகர்வால் தற்போது தமிழக காவல்துறையின் உச்சபட்ச பதவியான டிஜிபியாக அரியணை ஏறியிருப்பது காவல்துறை வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் 3 உயர் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இதையும் படிங்க: தவெக தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபி-க்கு கடிதம்! குழந்தைகளை அரசியலில் பயன்படுத்தியதாகப் புகார்!