மத்திய கிழக்கு போரில் 6 இந்தியர்கள் பலி! மாயமான ஒருவரை தேடும் பணி தீவிரம்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றத்தில் சிக்கி இதுவரை 6 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே நடைபெற்று வரும் வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில், அங்குள்ள பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வந்த இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உறுதி செய்யப்பட்ட தகவலின்படி 6 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்தியர் ஒருவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் மாயமாகியுள்ளார். அவரைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்துமாறு அங்குள்ள இந்தியத் தூதரகங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இறந்தவர்களின் உடல்களை விரைவாக இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து தூதரக ரீதியிலான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் உடல்களைத் தாயகம் கொண்டு வரவும், மாயமானவரைத் தேடவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அங்குள்ள மற்ற இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன, என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மத்திய கிழக்கு போர் எதிரொலி! பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆய்வுக்கூட்டம்!
உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக இந்தியா கொண்டு வரவும் (Repatriation), பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளைச் செய்யவும் வெளியுறவு அமைச்சகம் முன்னுரிமை அளித்து வருகிறது. போர் தொடங்கிய பிப்ரவரி 28-லிருந்து இதுவரை சுமார் 3 லட்சம் இந்தியர்கள் விமானம் மூலம் பத்திரமாகத் தாயகம் திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இந்தியர்களுக்கு உதவ பிரத்யேகக் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகின்றன.
ஏற்கனவே போர்ப் பகுதியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன்' தொடர்பான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த உயிரிழப்புச் செய்திகள் இந்தியர்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு அங்குள்ள சூழ்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஈரானுக்கு முடிவுரை? ஒரே நாளில் 58 கப்பல்கள் காலி! அணு ஆயுத எச்சரிக்கையுடன் ஆவேசமாக பேசிய டிரம்ப்!