சென்னையில் அமித் ஷா வருகைக்கு எதிர்ப்பு! முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கூண்டோடு கைது!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க புறப்பட்ட காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாமல்லபுரத்தில் தென் மண்டல கவுன்சில் மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து மனு அளிக்கவும் எதிர்ப்புத் தெரிவிக்கவும் புறப்பட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், முன்னாள் தலைவர்கள் கே.எஸ். அழகிரி, கே.வி. தங்கபாலு, திருநாவுக்கரசர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொண்டர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், மத்திய பாஜக அரசையும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் கடுமையாகச் சாடினார். மக்கள் தொகையைக் காரணம் காட்டி தென் மாநிலங்களின் அரசியல் பலத்தைப் பறிக்கும் வகையில் தொகுதி மறுசீரமைப்பை மறைமுகமாகத் திணிக்க அமித் ஷா முயற்சிக்கிறார் என்றும், மாணவர்கள் மீதான அத்துமீறிய தாக்குதல்களுக்குப் பின்னணியில் அவரே செயல்பட்டார் என்றும் குற்றம்சாட்டினார். தமிழகத்தில் எதிர்ப்பு எதுவும் இல்லை என்று அவர் ஒருபோதும் நினைத்துவிடக் கூடாது; ஜனநாயக ரீதியான எங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்யவே அமித் ஷாவை சந்திக்கச் சென்றோம், ஆனால் போலீஸ் அனுமதி மறுத்துக் கைது செய்துள்ளது என்றார்.
நாளை நடைபெறவுள்ள தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் பங்கேற்பது மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளராகத் தமிழ்நாடு முதலமைச்சரே செயல்படுவதால், மேகதாது பிரச்சினை குறித்து அவர் உரிய முறையில் குரல் எழுப்புவார் என நம்புவதாகத் தெரிவித்தார். அண்டை மாநிலங்கள் தங்களது மாநில நலனை மட்டுமே பேசும் சூழலில், தமிழக அரசு எடுக்கும் அனைத்து உரிமைப் போராட்டங்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவாகத் துணை நிற்கும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தருவோம்": தவறுகளைச் சுட்டிக்காட்டுவோம் என அண்ணாமலை அதிரடி
மேலும், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டக் கூடாது என்பதில் தமிழ்நாடு காங்கிரஸ் எவ்வித சமரசமும் இன்றித் தீர்க்கமாக உள்ளது என்றும், மேகதாது திட்டம் தமிழகத்தின் டெல்டா விவசாயிகளுக்கு எதிரானது என்பதால் பிரதமர் நரேந்திர மோடியும், அமித் ஷாவும் எக்காரணம் கொண்டும் இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் மாணிக்கம் தாகூர் திட்டவட்டமாக வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: ஓட்டு வங்கி ஆசையால் வந்தே மாதரத்தை மறந்த காங்கிரஸ்: சோனியா மீது அமித்ஷா ஆவேசம்!