களேபரமான சட்டசபை: முதல்வர் நுழையும்போது எழுந்து நிற்க வேண்டுமா? அமைச்சர் ரமேஷ் கேள்வி; திமுக எதிர்ப்பு!!
8 கோடி மக்களின் பிரதிநிதியான முதல்வர் உள்ளே வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் அமர்ந்திருக்கலாமா?
தமிழக சட்டப்பேரவையில் இன்று வருவாய்த் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது, அவையின் கண்ணியம் தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. முதல்வர் ஜோசப் விஜய் அவையில் நுழையும்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுந்து நிற்க வேண்டும் என்ற கண்ணியத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என அமைச்சர் ரமேஷ் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னாள் முதல்வரும் திமுக எம்எல்ஏவுமான ஓ.பன்னீர்செல்வம், சட்டசபையில் கண்ணியமாகப் பேச வேண்டும் என வலியுறுத்தியதை அடுத்து அமைச்சர் ரமேஷ் பேசினார். “முதல்முறையாக சட்டசபைக்கு வந்துள்ள நாங்கள் கண்ணியத்தைக் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால் எதிர்க்கட்சித் தலைவருக்கு முதலில் அவையின் கண்ணியத்தைக் கற்பிக்க வேண்டும். முதல்வர் விஜய் அவைக்குள் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்பதில்லை. 8 கோடி மக்களின் பிரதிநிதியான முதல்வர் உள்ளே வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் அமர்ந்திருக்கலாமா?” என அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “முதல்வர் அவைக்குள் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்க வேண்டுமா, கூடாதா?” என கேள்வி எழுப்பினார். அப்போது கே.என்.நேரு சட்டென எழுந்து, “எங்கள் தலைவர் பெயரை அமைச்சர் உச்சரித்ததற்கு முதல்வர் சரியாகக் கையாண்டதில் (மன்னிப்பு கேட்டதில்) மகிழ்ச்சி. தமிழகத்தில் திமுக ஆட்சியின் போது முன்னாள் முதல்வர் உள்ளே வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நின்றதே இல்லை. அது அவரவர் நடைமுறை. இதைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை. ஆனால் எதிர்க்கட்சித் தலைவருக்கு கண்ணியத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும் எனச் சொல்வது தவறு” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சட்டசபையில் முதலமைச்சர் முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றம்.. சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவிப்பு!
இதற்கு முன்னதாக திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் பேசும்போது, உதயநிதி ஸ்டாலினைப் பாராட்டி, தவெக வாக்குறுதிகள் மூன்று மாதங்களில் நிறைவேறவில்லை என விமர்சித்தார். அப்போது அமைச்சர் ரஞ்சித் குமார் குறுக்கிட்டு ஆவேசமாகப் பேசியபோது, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை ‘கலைஞர்’ எனக் குறிப்பிடாமல் சொன்னதால் திமுக உறுப்பினர்கள் கொந்தளித்தனர்.
ஓ.பன்னீர்செல்வம், “கலைஞர் என்றுதான் சொல்ல வேண்டும். நீ மன்னிப்பு கேள் என்று உறுப்பினரிடம் சொன்னவர் எம்.ஜி.ஆர். அதே கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார். இந்த சம்பவங்கள் சட்டசபையில் கண்ணியம் மற்றும் நடைமுறைகள் குறித்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: 4 நாட்கள் சட்டசபை விடுமுறை.. 17ம் தேதி தொடங்கும் மானியக் கோரிக்கை விவாதம்!!