பாஜக தொடுக்கும் தாக்குதல்களை தகர்ப்போம்.. யுகாதி நாளில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!
இன்று யுகாதி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
இன்று, யுகாதி பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இது தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு தினமாகப் போற்றப்படும் ஒரு மிக முக்கியமான திருவிழா ஆகும். யுகாதி என்ற சொல் சமஸ்கிருதத்தில் "யுகம் + ஆதி" என்று பொருள்படும். அதாவது ஒரு யுகத்தின் ஆரம்பம் அல்லது புதிய காலத்தின் தொடக்கம் என்பதாகும்.
சூரிய-சந்திர நாட்காட்டியின்படி சைத்ர மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் முதல் நாளான பிரதமை திதியில் இப்பண்டிகை அனுசரிக்கப்படுகிறது. இந்நாள் வசந்த காலத்தின் துவக்கத்தையும் குறிப்பதால் இயற்கையின் புத்துயிர்ப்பு மற்றும் புதிய தொடக்கங்களின் அடையாளமாக விளங்குகிறது. இன்றைய யுகாதி நாளில் குடும்பங்கள் ஒன்றாகக் கூடி சிறப்பு உணவுகளைத் தயாரித்து, புத்தம் புது நம்பிக்கையுடன் புதிய ஆண்டை வரவேற்கின்றன.
புதிய முயற்சிகளைத் தொடங்குவதற்கு ஏற்ற நாளாகவும் இது கருதப்படுகிறது. இயற்கையின் பசுமை தழைக்கும் வசந்த காலத்துடன் இணைந்து, மனித வாழ்விலும் புதிய துவக்கம், செழிப்பு, மகிழ்ச்சி நிறைய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இன்று அனைவரும் யுகாதியைக் கொண்டாடுகிறார்கள்.
இதையும் படிங்க: கேள்வி கேட்கும் பெண்களை "கூலிப்படை " வைத்து துன்புறுத்தும் திமுக..!! ஆதாரத்தோடு விளாசிய அதிமுக..!!
முதலமைச்சர் ஸ்டாலின் யுகாதி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தெலுங்கு, கன்னட மொழி பேசும் எனதருமைத் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் உளம்நிறைந்த உகாதி நல்வாழ்த்துகள் என்றார். மொழித்திணிப்பு, பண்பாட்டுப் படையெடுப்பு, நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு, தொகுதி மறுவரையறை பாதிப்பு என ஒன்றிய பா.ஜ.க. அரசு நம் மேல் தொடுத்திடும் தாக்குதல்களை எல்லாம் நம் ஒற்றுமையால் வெல்வோம் என்றும் கூறினார். இந்த உகாதி புதிய எழுச்சிக்கு வழிவகுக்கட்டும் என்றும் திராவிட மாடல் 2.0 அமையட்டும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேர்தல் வந்தாச்சு..! பரபரப்பு அரசியல் களம்..! விசிகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்..!!