மே 10 வரை சென்னையிலேயே இருங்கள்! எம்.எல்.ஏ.க்களுக்கு மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியுள்ளதால் எம்எல்ஏ.க்கள் வரும் 10ம் தேதி வரை சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்று ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு மிக முக்கியமான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். இது தமிழக அரசியல் களத்தில் நிலவும் தற்போதைய இழுபறிக்கு மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பின்வருமாறு அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரப்படி, கட்சியின் நலன் கருதி நாம் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதற்கான சூழல்கள் கனிந்து வருகின்றன. நமது கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் வரும் மே 10-ஆம் தேதி வரை கட்டாயம் சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும். எந்த நேரத்திலும் அவசர அழைப்பு வரலாம், என அவர் உத்தரவிட்டுள்ளார். மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் தத்தமது பகுதி எம்.எல்.ஏ.க்களுடன் தொடர்பில் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஒருபுறம் தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரி வருகிறார். மறுபுறம் அதிமுக மற்றும் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள சலசலப்புகள் திமுக-விற்குப் புதிய வாய்ப்புகளைத் திறந்து விட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. தவெக-விற்கு ஆட்சி அமைக்க ஆளுநர் இன்னும் அழைப்பு விடுக்காத நிலையில், அடுத்தகட்ட நகர்வு குறித்து திமுக ஆலோசித்து வருகிறது.
இதையும் படிங்க: அவசரப்பட்டு போகாதீங்க..! கூட்டணி கட்சி தலைவர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்..!
கூட்டணி மாற்றம்: காங்கிரஸுடனான உறவு முறிந்துள்ள நிலையில், பிற கட்சிகளின் ஆதரவுடன் ஒரு புதிய அரசியல் மாற்றத்தை திமுக முன்னெடுக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஸ்டாலினுக்கு அரசியல் முடிவுகளை எடுக்க ஏற்கனவே எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், எம்.எல்.ஏ.க்களைச் சென்னையிலேயே தங்கியிருக்கச் சொன்னது, வரும் 10-ஆம் தேதிக்குள் தமிழக அரசியலில் ஏதோ ஒரு பெரிய "அதிரடி மாற்றம்" நிகழப்போவதையே உறுதிப்படுத்துகிறது.
இதையும் படிங்க: திமுகவில் அதிரடி முடிவு! வாரிசு அரசியல் பேச்சுக்கு முற்றுப்புள்ளி! நேரு கையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி?!