செப்டம்பர் 1 முதல் செல்போன்களுக்கு தடை! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் உத்தரவு!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன்களை உள்ளே எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகப் போற்றப்படும் உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலுக்குள் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பக்தர்கள் செல்போன்களை எடுத்துச் செல்ல முழுமையாகத் தடை விதிக்கப்படுகிறது.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் சுற்றறிக்கை உத்தரவின்படி, திருக்கோயிலின் புனிதம் மற்றும் பாதுகாப்பைப் பேணிக்காக்கும் நோக்கில் இந்த முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் துணை ஆணையர் இன்று (18.08.2026) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வச் செய்திக் குறிப்பில் விரிவான வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் செல்போன்கள் கொண்டுவருவதைத் தவிர்க்குமாறும், அவ்வாறு கொண்டுவரும் பட்சத்தில் அவற்றைப் பாதுகாப்பாக வைத்துச் செல்வதற்கு ஏதுவாக திருக்கோயில் வளாகத்தில் 5 இடங்களில் பிரத்யேகப் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, கிழக்கு இராஜகோபுரம் அருகே 2 இடங்கள், வடக்கு அம்மணி அம்மன் கோபுரம் அருகே 2 இடங்கள் மற்றும் தெற்கு திருமஞ்சன கோபுரம் அருகே 1 இடம் எனப் பாதுகாப்பு அறைகள் செயல்படவுள்ளன.
இதையும் படிங்க: ரூ.6.39 கோடியை திரும்பப் பெற வேண்டும்: பழமை மாறா வளர்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
இம்மையங்களில் பக்தர்கள் தங்களது செல்போன்களை ஒப்படைத்துவிட்டு, தலா 5 ரூபாய் கட்டணம் செலுத்தி டோக்கன் பெற்றுக்கொள்ளலாம். பின்னர் சுவாமி மற்றும் அம்மன் தரிசனத்தை முடித்துத் திரும்பும்போது, அந்த டோக்கனைக் காண்பித்துத் தங்களது செல்போன்களைப் பாதுகாப்பாகத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த உத்தரவை மீறி யாரேனும் திருக்கோயிலுக்குள் செல்போன்களை மறைமுகமாக எடுத்துச் சென்றால், அவை உடனடியாகப் பறிமுதல் செய்யப்படுவதோடு, காவல்துறை மூலம் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் திருக்கோயில் நிர்வாகம் திட்டவட்டமாக எச்சரித்துள்ளது. திருக்கோயில் நிர்வாகத்தால் கொண்டுவரப்படும் இப் பாதுகாப்பு நடைமுறைகளுக்குப் பக்தர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை!" - திருவண்ணாமலையில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை!