“கதற, கதற கட்டி வைத்து அடி... சக கைதிகள் செய்த கொடூரம்”... சிறைக்குள் சபரிவர்மனுக்கு நடந்தது என்ன?
நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதி உயிரிழந்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன
நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவத்தில், ஏற்கனவே மூன்று சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் எட்டு சக கைதிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே, சிறைக்குள் நடந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த, 34 வயதான மாற்றுத்திறனாளி வியாபாரி சபரிவர்மன், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சிறையில் இருந்தபோது, அங்கு ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த 22 கைதிகளில் சிலர் அவரிடம் விசாரித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இருதரப்புக்கும் இடையே முதலில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: நாகர்கோயில் கைதி மரணத்தில் திடுக் திருப்பம்... லிஸ்ட் போட்டு தூக்கப்பட்ட 8 பேர்... யார் என்பதில் தான் ட்விஸ்ட்டே...!
இந்த சம்பவம் தொடர்பாக சிறைக் காவலர்கள் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அதன் பின்னர், சபரிவர்மனை சிறைக் காவலர்களும் தாக்கியதாகவும், மேலும் கைதிகளை பயன்படுத்தி அவரது கைகளையும் கால்களையும் கட்டிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறைக் காவலர்களின் தூண்டுதலின் பேரில், எட்டு கைதிகள் சேர்ந்து சபரிவர்மனை தாக்கியதோடு, சிறைக் காவலர்களும் அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. அவரது உடலில் மொத்தம் 19 காயங்கள் இருந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கொடூரமான தாக்குதலின் விளைவாகவே சபரிவர்மன் உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள எட்டு கைதிகளும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் மீது திருட்டு உள்ளிட்ட மொத்தம் 54 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரது பெயர் போலீசாரின் ரவுடிகள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.
மற்றொரு கைதியான அஜித், கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர். அவர் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவரது பெயரும் ரவுடிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த பெருமாள், ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர். மாத்தாண்டத்தைச் சேர்ந்த விஷ்ணு மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. கன்னியாகுமரியைச் சேர்ந்த அரவிந்த் மற்றும் சேதுராம் ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், சரத் மற்றும் சாரதி ஆகியோர் மீதும் அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டு கைதிகளும் தற்போது அதே நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட மூன்று சிறைக் காவலர்கள், நாங்குநேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நாகர்கோயில் சிறை கைதி மரணத்தில் திடீர் திருப்பம்... அம்பலப்படுத்திய பிரேத பரிசோதனை அறிக்கை... 3 காவலர்கள் அதிரடி கைது...!