ஈரக்குலையே நடுங்குது.! கொஞ்சி, கெஞ்சி ஓட்டு கேட்டீங்களே விஜய்..? வேடிக்கை பார்ப்பது கேவலத்தின் உச்சம்... நயினார் தாக்கு.!
திருவள்ளூரில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்திற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார்.
உங்கள் அலட்சிய ஆட்சிக்கு எங்கள் குழந்தைகள் பலியாக வேண்டுமா என முதல்வர் விஜய்க்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி இருக்கிறார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டுள்ள செய்தியை வாசிக்கும் பொழுதே ஈரக்குலை நடுங்குகிறது என்றார்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பீகார், உத்தரப் பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன் குடியிருந்து பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், வடமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த 3 வயது சிறுமி நேற்று மாலை திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோரும், அப்பகுதி மக்களும் சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, இயற்கை உபாதைக்காக சென்ற சில பெண்கள் அருகிலிருந்த புதர்ப் பகுதியில் காயங்களுடன் கிடந்த சிறுமியை கண்டுபிடித்தனர். உடனடியாக மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பீகாரைச் சேர்ந்த நபரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து இது போன்ற பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த சம்பவத்தை தமிழ்நாடு பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் கண்டித்துள்ளார்.
இதையும் படிங்க: இதுதான் தவெகவின் அனைவருக்குமான அரசியலா? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி..!!
முந்தைய ஆட்சியைப் போல, தற்போதைய தவெக ஆட்சியிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைப் பார்த்தால், “மாற்றம்” என்று உங்களை நம்பிய தமிழக மக்கள் ஏமாந்து போய்விட்டார்களோ என்று தோன்றுகிறது என கூறினார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தையே உலுக்கிய கோவை சூலூர் 10 வயது சிறுமியின் வழக்கிற்கு பிறகாவது பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தாமல் அலட்சியப்படுத்தியதன் விளைவு தான், தற்போது நமது மாநிலத்தின் அடுத்த மழலைச் செல்வத்தை நாம் பலி கொடுத்துள்ளோம் என்று தெரிவித்தார். எந்தக் குழந்தைகளைக் கொஞ்சி, கெஞ்சி ஓட்டுக் கேட்டு ஆட்சி அமைத்தீர்களோ, அதே குழந்தைகளை மனிதர்கள் போர்வையில் உலவும் மிருகங்கள் வேட்டையாடுவதை கைகட்டி நீங்கள் வேடிக்கை பார்ப்பது கேவலத்தின் உச்சம் என்றார்.
எனவே, அடுத்த குழந்தை பலியாவதற்கு முன்பாவது உங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ள வேண்டும் என்றும் குழந்தைகளின் பாதுகாப்பையும், உரிமைகளையும் உறுதி செய்யும் சட்ட, திட்டங்களை வகுத்து அனைத்து குழந்தைகளின் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: "ஆவின் பால் உற்பத்தி முடக்கம்"..! ஆரோக்கியத்தின் மீதான நேரடி தாக்குதல்... நயினார் கண்டனம்..!