ஆணவ அரசியலை அழிப்பது உறுதி.. ஆ.ராசா பேச்சால் கொதித்துப்போன நயினார்..!
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தரக்குறைவாக விமர்சித்த ஆ.ராசாவுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை திமுக எம்.பி. ஆ.ராசா, கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில், ஆ.ராசா, அமித்ஷாவை முட்டாள் என விமர்சித்தார். மதுரையில் அமித்ஷா பேசியதற்கு பதிலடியாக, டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிராவை கைப்பற்றிவிட்டோம், அடுத்து தமிழ்நாடு என்ற அவரது கூற்றை கேலி செய்து, ஸ்டாலின் தனி மனிதர் இல்லை, அவருக்குப் பின்னால் பெரியார், அண்ணா, கலைஞரின் தத்துவம் உள்ளது எனப் பேசினார். இந்தப் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், முருகன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஆ.ராசாவுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி தெரிவித்துள்ளார். அமித்ஷாவை தரக்குறைவாக விமர்சித்த ஆ.ராசாவுக்கு கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பான அவரது பதிவில், கண்களுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்து, அம்பலப்பட்டு, சிறை சென்றுவந்த திமுக எம்பி திரு. ஆ. ராசா, நாட்டிற்காக நேர்மையாக உழைத்துக் கொண்டிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அனிதாவை தரக்குறைவாக விமர்சித்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.
இதையும் படிங்க: சொத்துக்குவிப்பு வழக்கு... குற்றச்சாட்டு பதிவு வேண்டாம்! ஆ.ராசா நீதிமன்றத்தில் சொன்ன விஷயம்?
மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்தில் பதவி வகிப்போருக்கு நாவடக்கம் தேவை, ஆ.ராசா அவர்களே., உங்கள் கட்சியின் ஆபாசப் பேச்சாளர்கள் போல கைத்தட்டல்களுக்காக எதையாவது உளறுவது ஆபத்தானது எனவும் கடந்த சில தினங்களாக பயங்கரவாதிகளின் புகலிடமாகத் தமிழகம் மாறியதற்கு முழு முதற்காரணம் உங்கள் திராவிட மாடல் அரசு, சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னனைக் கட்சிப் பொறுப்பில் வைத்துத் தாலாட்டிக் கொண்டிருந்த அரசு உங்கள் விடியா அரசு, தமிழகத்தில் ஆயுதக் கலாச்சாரம் வேரூன்றி வளர்வதை வேடிக்கை பார்க்கும் அரசு உங்கள் விளம்பர மாடல் அரசு, கர்ப்பிணிப் பெண்ணைக் காவல் நிலையத்திலேயே வைத்துக் கொடூரத் தாக்குதல் நடத்திய அரசு உங்கள் கொடுங்கோல் அரசு என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இப்படி பொதுமக்களின் பாதுகாப்பை முழுவதுமாக அடகுவைத்த நீங்கள், இந்தியா என்ற மாபெரும் ஜனநாயக நாட்டின் பாதுகாப்பை மொத்தமாகக் கட்டிக் காக்கும் நமது மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சரைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என்றும் திமுக ஆட்சியில் தமிழகத்தின் அவல நிலை குறித்து எதுவும் தெரியாமல், நாம் தான் நம்பர் 1 முதல்வர் என்ற மாய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் ஒருவரை தலைவராகக் கொண்ட மூடர் கூட்டத்திற்கு அனைவரும் முட்டாளாகத் தான் தெரிவார்கள், மஞ்சள் காமாலைக்காரர் கண்களுக்கு அத்தனையும் மஞ்சளாகத் தெரிவது போல., உங்கள் கீழ்த்தரமான ஆணவமிக்க அரசியல் நாகரிகமற்ற பேச்சுக்களுக்கு, தமிழக மக்கள் உங்களை 2026-க்குப் பிறகு அரசியலை விட்டே துரத்திவிடுவது உறுதி எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அமித்ஷாவுக்கு கட்டுப்பட்டதா அதிமுக? அதிர்ச்சியை கிளப்பிய அமைச்சர் சிவசங்கர்!!