சட்டமன்ற மன்றமா.? சினிமா ஸ்டுடியோவா.? தந்தை - மகன் கதை இப்ப தேவையா.? நயினார் சரமாரி கேள்வி.!
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசியதை சுட்டிக்காட்டி நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்தார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சமீபத்தில் சட்டமன்றத்தில் நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தைக் குறிப்பிட்டு கடும் விமர்சனம் தொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:சட்டமன்றம் உங்கள் சினிமா ஸ்டுடியோ அல்ல. உங்கள் அடுக்கடுக்கான வசனங்களைக் கேட்டு ஆர்ப்பரிப்பதற்கு தமிழக மக்கள் ஒன்றும் உங்கள் கட்சியின் ஆச்சரியக்குறிகள் அல்ல. உங்கள் கட்சிக்கு இரண்டு அமைச்சர்களை வழங்கிய கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பத்து கொலைகள் நடந்துள்ளன.
உங்கள் அலுவலகம் அமைந்துள்ள சென்னை மாநகரில் நேற்று ஒரே நாளில் மட்டும் இரண்டு படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. நீங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து ஆறு காவல் மரணங்கள் நடந்துள்ளன. பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலர்களில் சிலர் பொதுமக்களைத் தரக்குறைவாக நடத்துகின்றனர். உங்கள் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.
இத்தகைய அவல நிலைமை நிலவும்போது, இன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் முறையாகப் பதில் அளித்திருக்க வேண்டும். சீரழிந்து கொண்டிருக்கும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கிற்கு முழுப் பொறுப்பேற்று, மக்கள் பாதுகாப்பிற்கென புதிய திட்டங்களை முன்மொழிந்திருக்க வேண்டும். மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் உத்தரவாதம் அளித்திருக்க வேண்டும்.
இதையும் படிங்க: ரூ.1200 கோடியில் தலைமைச் செயலகம்..! சொகுசுக்காக வரிப்பணத்தை வீணடிப்பதா.? நயினார் காட்டம்.!
ஆனால் அதற்குப் பதிலாக, “எனக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்ற ரீதியில் அதிரடித் திரைப்படத்தில் அடுக்கடுக்கான வசனங்கள் பேசுவது போல கத்திக் கூப்பாடு போடுவது அநாகரிகமான அரசியல் ஆகும்.எனவே, மக்கள் மன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை மட்டும் பேசுங்கள். “தந்தை, மகன்” கதையெல்லாம் தமிழக மக்களுக்குத் தேவையில்லை என்று நயினார் நாகேந்திரன் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: திருடு போன மரகத முருகன்..! அவ்ளோ மெத்தனம்..! மீட்டுக் கொண்டு வர நயினார் வலியுறுத்தல்..!!