×
 

தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 லட்சம் கடன் - நயினார் நாகேந்திரன் விளாசல்!

தமிழகம் 10.5 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளிப்பதாகவும், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் தலா 2 லட்சம் ரூபாய் கடன் சுமை இருப்பதாகவும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம், உதகை சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று கோத்தகிரி அருகே உள்ள கூக்கல் தொரை கிராமத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது திமுக அரசின் நிதி மேலாண்மை மற்றும் புதிய அரசியல் வருகைகள் குறித்து அவர் முன்வைத்த விமர்சனங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன

கூக்கல் தொரை கிராமத்திற்கு வருகை தந்த நயினார் நாகேந்திரனுக்குப் படுகர் இன மக்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தனது பேச்சைத் தொடங்கிய நயினார் நாகேந்திரன், படுகர் இன மக்களின் மொழியிலேயே பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். படுகர் மொழியில் "ஹெத்தையம்மனை" வணங்கி, மக்களின் நலன் விசாரித்த அவர், அதே மொழியில் தனக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டார். இது அங்கிருந்த மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


தமிழகம் இன்று திவாலாகிக் கொண்டிருக்கிறது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 14 லட்சம் கோடி ரூபாய் நிதி கொடுத்தும், இன்னும் தமிழ்நாடு 10.5 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கிறது. இன்று தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் தலா இரண்டு லட்சம் ரூபாய் கடன் சுமை உள்ளது. மோசமான நிதி மேலாண்மையால் மாநிலம் சீரழிந்து வருகிறது.

இதையும் படிங்க: பெண்கள் மற்றும் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது திமுக - ஊட்டியில் பியூஷ் கோயல் ஆவேசம்!

திமுக எதிர்ப்பு மற்றும் கூட்டணி குறித்த விளக்கமளித்து தன்னுடைய அரசியல் பயணம் குறித்துப் பேசிய அவர்,
நானும் ஜெயலலிதா அம்மையாரின் நம்பிக்கைக்குரிய அமைச்சராகவும், மாவட்டச் செயலாளராகவும் வளர்ந்தவன் தான். அவரது மறைவுக்குப் பின் நரேந்திர மோடியின் தலைமையை ஏற்று இன்று மாநிலத் தலைவராக உயர்ந்துள்ளேன்.

தமிழகத்தில் திமுகவின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அதற்காகத்தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் (அதிமுக) கூட்டணி வைத்துள்ளோம். தமிழகத்தில் மீண்டும் மக்களாட்சி மலர எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமை ஏற்க வேண்டும்.

சமீபகால அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசிய அவர், "ஜோசப் விஜய் பின்னால் இளைஞர் கூட்டம் வருகிறது. ஆனால் அது ஒருபோதும் ஓட்டாக மாறாது" எனத் தெரிவித்தார். மேலும், நீலகிரி மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், அதன் காரணமாக 10 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். மக்களாட்சி வேண்டுமா அல்லது ஒரு குடும்பத்தின் ஆட்சி வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டிய நேரம் இது எனக்கூறி, வேட்பாளர் போஜராஜனுக்கு ஆதரவு திரட்டினார்.

 

 

இதையும் படிங்க: விஜய் கேரவனுக்கு வேண்டுமானால் சிஎம் ஆகலாம், தமிழ்நாட்டிற்கு முடியாது - முத்தரசன் கடும் தாக்கு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share