பெண்கள் மற்றும் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது திமுக - ஊட்டியில் பியூஷ் கோயல் ஆவேசம்!
உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க மாட்டேன் எனச் சவால் விட்டுச் சொல்ல ஸ்டாலினுக்குத் துணிச்சல் இருக்கிறதா என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரும், பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், தேயிலை விவசாயிகள், தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலாத் துறை சார்ந்தவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைமையிலான கூட்டணியைத் துவம்சம் செய்யும் வகையில் கருத்துக்களை முன்வைத்தார்.
நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்ததற்குக் காரணம் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் எதிர்மறை அணுகுமுறைதான் என அவர் குற்றம் சாட்டினார்.
பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ளாமல் திமுகவும் காங்கிரஸும் தமிழ்நாட்டுப் பெண்களை ஏமாற்றிவிட்டனர். நமது சகோதரிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்களிக்கப் பிரதமர் மோடி கொண்டு வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவை இவர்கள் தடுத்து நிறுத்தி, பெண்களைக் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளனர்.
இதையும் படிங்க: விஜய் கேரவனுக்கு வேண்டுமானால் சிஎம் ஆகலாம், தமிழ்நாட்டிற்கு முடியாது - முத்தரசன் கடும் தாக்கு!
முதலமைச்சர் ஸ்டாலின் வடக்கையும் தெற்கையும் பிரிக்கப் பார்க்கிறார். இந்தியா ஒரே நாடு என்பதில் நாம் பெருமை கொள்கிறோம். தொகுதி எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்தப் பிரதமர் உறுதி அளித்தும், தவறான தகவல்களைப் பரப்பி ஸ்டாலின் மசோதாவை முடக்கியுள்ளார். தமிழகத்தின் வாரிசு அரசியல் குறித்துப் பியூஷ் கோயல் காரசாரமாகப் பேசினார்.
தமிழக மக்கள் ஒருபோதும் உதயநிதி ஸ்டாலின் போன்ற ஒருவரை முதலமைச்சராக விரும்ப மாட்டார்கள். உதயநிதியைத் துணை முதல்வராக்கிய ஸ்டாலின், அவரை அடுத்த முதலமைச்சராக்கத் துடிக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. 'உதயநிதியை முதலமைச்சராக்க மாட்டேன்' எனச் சவால் விட்டுச் சொல்ல ஸ்டாலினுக்குத் துணிச்சல் இருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தின் தற்போதைய அவலநிலை குறித்து அமைச்சர் கவலை தெரிவித்தார். போதிய வளர்ச்சியின்றி நீலகிரி சீரழிந்துள்ளதாகவும், தேயிலை விவசாயிகளின் வாரிசுகள் தங்களது எதிர்காலத்தை இழந்து நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடுமையான மாசு மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து, பொருளாதார நிலை அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளது.
"தமிழக மக்கள் இனி போலி வாக்குறுதிகளை நம்பத் தயாராக இல்லை; அவர்கள் செயல்பாடுகளை எதிர்பார்க்கின்றனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சி அமைவது உறுதி. ஊழல் மலிந்த இந்த திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப மக்கள் முடிவு செய்துவிட்டனர்" எனப் பியூஷ் கோயல் உறுதியுடன் தெரிவித்தார். மத்திய - மாநில அரசுகளின் திட்டங்கள் முறையாகச் சேரவும், இளைஞர்களின் நலன் மேம்படவும் சிறந்த அரசைத் தேர்ந்தெடுக்குமாறு அவர் நீலகிரி மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: “ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாகச் செல்லுங்கள்!” - உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!