பக்கா ப்ளான்.. கனவோடு சாத்தூர் பயணம்.. தவிடுபொடியாக்கிய சசிகலா..!! விரக்தியின் உச்சத்தில் நயினார் நாகேந்திரன்..!!
தமிழக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வெற்றியும் சகிகலா கட்சி பெற்ற ஓட்டுக்களால் தடுக்கப்பட்டு உள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் அரசியல் களத்திற்கு திரும்பிய சசிகலா, தனது புதிய கட்சியான அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் (அ.பு.ம.மு.க.) மூலம் தமிழக சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அணி உள்ளிட்ட சில சமுதாய அமைப்புகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட இந்தக் கட்சி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு நேரடி சவாலாக அமைந்தது.
நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், முதுகுளத்தூர் தொகுதியில் சசிகலா கட்சியின் வேட்பாளர் ராம்குமார் 40,222 ஓட்டுகளைப் பெற்று பெரும் வரவேற்பைப் பெற்றார். இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் 68,003 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் பாண்டி 47,501 ஓட்டுகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்த நிலையில், சசிகலா கட்சியின் ஓட்டுகள் அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பாதித்ததாகக் கருதப்படுகிறது.
ராஜகண்ணப்பனுக்கு 16,598 வாக்குகள் வித்தியாசம் இருந்தது. இதேபோல் உசிலம்பட்டி தொகுதியிலும் சசிகலா கட்சியின் வேட்பாளர் அய்யப்பன் 16,620 ஓட்டுகள் பெற்றார். தவெக வேட்பாளர் விஜய் 65,743 வாக்குகளுடன் 1,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுகவின் மகேந்திரன் 63,938 ஓட்டுகளுடன் தோல்வியைத் தழுவினார். சசிகலா கட்சியின் ஓட்டுகள் இங்கும் அதிமுகவின் வெற்றியைத் தடுத்ததாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பெண்கள் இடஒதுக்கீட்டை திமுக தடுத்து வருகிறது! சாத்தூரில் சந்திரபாபு நாயுடு அனல் பறக்கும் பேச்சு!
மேலும், தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் வெற்றி வாய்ப்பும் சசிகலா கட்சியால் பாதிக்கப்பட்டது. அந்தத் தொகுதியில் சசிகலா சார்பில் போட்டியிட்ட இசக்கிராஜா 11,602 ஓட்டுகள் பெற்றார். திமுக வேட்பாளர் கடற்கரைராஜ் 62,060 வாக்குகளுடன் 5,959 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நயினார் நாகேந்திரன் 56,071 ஓட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் தங்கினார்.
சங்கரன்கோவில் தொகுதியில் 8,006 வாக்குகள், தென்காசியில் 7,715 வாக்குகள், திருமங்கலத்தில் 2,851 வாக்குகள், மேலூரில் 2,628 வாக்குகள், பரமக்குடியில் 2,239 வாக்குகள் மற்றும் வாசுதேவநல்லூரில் 2,249 வாக்குகள் என பல தொகுதிகளில் சசிகலா கட்சி ஆதரவு பெற்றுள்ளது. இந்த ஓட்டுகள் பெரும்பாலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணியினரிடமிருந்து பிரிந்து சென்றவை என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து.
சசிகலா, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசல்களுக்குப் பின் நீக்கப்பட்டார். இப்போது புதிய கட்சியைத் தொடங்கி, அதிமுகவுக்கு எதிராக தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இந்தத் தேர்தல் முடிவுகள், தமிழக அரசியலில் சசிகலா இன்னும் ஒரு முக்கிய சக்தியாக இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. அதிமுக தரப்பினர் இந்த ஓட்டுப் பிரிவினையை கவனத்தில் கொண்டு எதிர்கால உத்திகளை வகுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விருதுநகர் கோர சம்பவம்: மருத்துவமனையில் தொழிலாளர்கள்.. ஓடோடி சென்று நலம் விசாரித்த நயினார் நாகேந்திரன்..!!