×
 

விருதுநகர் கோர சம்பவம்: மருத்துவமனையில் தொழிலாளர்கள்.. ஓடோடி சென்று நலம் விசாரித்த நயினார் நாகேந்திரன்..!!

தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், வாச்சக்காரப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டனார்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த வனஜா பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19, 2026) பிற்பகல் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான இந்த தனியார் பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீயால் பெரும் சேதம் ஏற்பட்டது.

விபத்தின் தாக்கம் 10 கிலோமீட்டர் தொலைவு வரை உணரப்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். இந்த கொடூர விபத்தில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதற்கட்டத்தில் 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பேச்சியம்மாள் (51), பஞ்சவர்ணம் (57) உள்ளிட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது.

உயிரிழந்தவர்களில் பலர் அருகிலுள்ள சேர்வைக்காரன்பட்டி, திருத்தங்கல், கோவிந்தன் நல்லூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள். மேலும், 6க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலருக்கு 80 முதல் 100 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணியின்போது ஈடுபட்ட 13 பேர் சிறு காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 லட்சம் கடன் - நயினார் நாகேந்திரன் விளாசல்!

இந்த துயர சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விரிவாக கேட்டறிந்த அவர், சிறந்த சிகிச்சை அளித்து விரைவில் முழுமையாக குணமடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

நயினார் நாகேந்திரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “விருதுநகர் மாவட்டம் அருகிலுள்ள கட்டனார்பட்டியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து 23க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பை ஏற்படுத்திய செய்தி எனது மனதை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும் மனமார்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு மனவலிமையும் ஆறுதலும் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று கூறினார்.

மேலும், “காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விரிவாக அறிந்தேன். இத்தகைய துயர சம்பவங்கள் இனி நடைபெறாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார். விருதுநகர் மாவட்டம் பட்டாசு தொழிலுக்குப் பெயர் பெற்றது என்றாலும், இத்துறையில் அவ்வப்போது ஏற்படும் விபத்துகள் தொழிலாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளன.

உராய்வு காரணமாக வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொழிற்சாலை ஞாயிற்றுக்கிழமை செயல்பட்டது சம்பந்தமாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த விபத்து விருதுநகர் பட்டாசு தொழிலின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. அரசு சார்பில் உரிய இழப்பீடு, உதவிகள் வழங்கப்பட வேண்டும் என உள்ளூர் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நாளை கோவை வருகிறார் பிரதமர் மோடி! – அமித்ஷாவின் சிவகிரி ரோடு ஷோ விபரங்களை வெளியிட்டார் நயினார் நாகேந்திரன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share