தோழர் நல்லக்கண்ணு தமிழ்நாட்டுக்கு தேவை... ஆதங்கத்தை கொட்டிய செல்வப்பெருந்தகை..!!
நல்லகண்ணு போன்றோர் நாட்டுக்கு தேவை என செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணு உடல்நிலை கடந்த சில நாட்களாகவே மிகுந்த கவலைக்கிடமான நிலையில் உள்ளது. 101 வயதை எட்டிய இந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர், வயது மூப்பால் ஏற்பட்ட பல்வேறு உடல் பிரச்சினைகளால் கடந்த ஆறு மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்தார்.
குறிப்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டில் தவறி விழுந்ததால் தலையில் ஏற்பட்ட காயம், பின்னர் மூச்சுத் திணறல், நுரையீரல் தொற்று போன்ற பிரச்சினைகள் அவரை பலமுறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றன. பிப்ரவரி 1-ம் தேதி இரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அங்கு தொடர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக அவரது உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர் என்றாலும், அவரது நிலைமை தொடர்ந்து மோசமடைந்து கொண்டே இருப்பதாகவும், செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் மிக அதிக கவனிப்புடன் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கடைந்தெடுத்த ரவுடிகள்... கொலைகார கூடாரம் திமுக..!! கட்சிக்காரங்கள அடக்குங்க ஸ்டாலின்..! நயினார் விளாசல்..!!
அவருக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசக் கருவி சிகிச்சை மற்றும் மருந்துகள் பல்வேறு மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைப்படி அதிகரிக்கப்பட்டுள்ளது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அவரது உடல்நிலையை பல்வேறு சிகிச்சைகளின் மூலம் சீராக்க அதிதீவிர முயற்சியுடன், 24 மணிநேர தொடர் அதிதீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில், நல்லகண்ணு மீண்டு வருவார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார். நல்லகண்ணு போன்றோர் நாட்டுக்கு தேவை என்றும் கூறினார். பலமுறை இந்த மருத்துவமனைக்கு வந்து சென்றுள்ள நல்ல கண்ணு இந்த முறையும் மீண்டு எழுவார் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். மருத்துவர்கள் அவருக்கு உரிய சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: INS அஞ்சதீப்..! நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு..!!