பகீர் கிளப்பிய நாங்குநேரி கொலை வழக்கு..!! ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை..!!
நாங்குநேரி இளைஞர் கொலை வழக்கிலிருந்து ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே மஞ்சங்குளம் பகுதியைச் சேர்ந்த முத்துவின் மகன் சாமித்துரை என்ற 26 வயது இளைஞர், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி இரவு தனது வீட்டு முன்பகுதியில் ஒரு கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் முன்விரோதத்தின் அடிப்படையில் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.
சாமித்துரை தரப்பினருக்கும் எதிர்தரப்பினருக்கும் இடையே நீண்ட காலமாக ஜாதி ரீதியான பகை இருந்து வந்ததாகவும், அதன் தொடர்ச்சியாகவே இந்த கொலை அரங்கேறியதாகவும் விசாரணையில் தெரியவந்தது.நாங்குநேரி காவல்நிலையம் இந்த வழக்கைப் பதிவு செய்து உடனடியாக விசாரணையைத் தொடங்கியது. விசாரணையின் போது, கொலைக்குத் தொடர்புடையவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டது தெரியவந்தது.
அதன்படி, நடுநந்தன்குளத்தைச் சேர்ந்த விக்டர், கோதைசேரியைச் சேர்ந்த முருகேசன், தச்சநல்லூர் தாராபுரத்தைச் சேர்ந்த சஞ்ஜிவ்ராஜ், ஸ்ரீராம்குமார், ஆனந்த், ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியைச் சேர்ந்த ராஜசேகரன், வடக்கு தாழையூத்தைச் சேர்ந்த பிரவீன் ராஜ், கோவில்பட்டியைச் சேர்ந்த ராஜ்பாபு, எட்டயபுரத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் மற்றும் ஜேக்கப் உள்ளிட்ட பத்துப் பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: சிதம்பரம் அருகே இரட்டை கொலை... அண்ணன், தம்பி வெட்டி சாய்ப்பு... நடந்தது என்ன?
இந்த வழக்கில் முக்கிய சந்தேக நபராகக் கருதப்பட்டவர் பனங்காட்டுப்படை கட்சியின் நிறுவனத் தலைவரும், தென் மாவட்டங்களில் பிரபல ரவுடியாக அறியப்பட்டவருமான ராக்கெட் ராஜா ஆவார். அவரது இயற்பெயர் ஆறுமுகபாண்டியன் என்ற பால விவேகானந்தன். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ஆனைகுடி கிராமத்தைச் சேர்ந்த இவர், சுமார் 50 வயதை எட்டியவர். இவர் மீது ஐந்து கொலை வழக்குகள் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் இருந்தன.
தற்போது நாங்குநேரி இளைஞர் கொலை வழக்கில் இருந்து ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 11 பேரையும் நெல்லை மாவட்ட கூடுதல் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் அதிர்ச்சி... தாய், மகன் மர்மமான முறையில் கொலை... போலீசாருக்கு எழுந்த முக்கிய சந்தேகம்...!