நவராத்திரி, தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு போகிறீர்களா? ஷாக் கொடுக்கும் ப்ளைட் டிக்கெட்! பயணிகளுக்கு அதிர்ச்சி!
நவராத்திரி மற்றும் தீபாவளி காலத்தில் விமானப் பயணத்துக்கான தேவை உச்சத்தை எட்டும் நிலையில், வரும் வாரங்களில் கட்டண நிலவரம் பயணிகளுக்கு முக்கிய கவலையாக மாறியுள்ளது.
நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில், நாட்டின் முக்கிய உள்நாட்டு விமான வழித்தடங்களில் டிக்கெட் கட்டணம் கணிசமாக உயரத் தொடங்கியுள்ளது. வழக்கமாக ரூ.7,000 முதல் ரூ.8,000 வரையிலான கட்டணத்தில் கிடைக்கும் சில விமான டிக்கெட்டுகள், பண்டிகை காலத்தை முன்னிட்டு ரூ.15,000-ஐ தாண்டியுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா இடங்களுக்கும் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது வழக்கம். இதனால், விமான டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு அதிகரித்து, முக்கிய நகரங்களுக்கு இடையிலான விமானக் கட்டணங்களிலும் உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அக்டோபர் 12 முதல் 18-ம் தேதி வரையிலான நவராத்திரி காலத்தில் மும்பை முதல் கொல்கத்தா செல்லும் ஒரு வழி விமானப் பயணத்துக்கான கட்டணம் ஒருவருக்கு ரூ.16,000 வரை உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே வழித்தடத்தில் வழக்கமான நாட்களில் சுமார் ரூ.8,000-க்குள் டிக்கெட் கிடைக்கும் நிலையில், தற்போது கட்டணம் இருமடங்காக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: பிளான் பண்ணிட்டீங்களா? தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்! சென்னை மக்களே அலர்ட்!
இதேபோல், டெல்லி–மும்பை வழித்தடத்திலும் விமானக் கட்டணம் அதிகரித்துள்ளது. வழக்கமாக சுமார் ரூ.6,500 ஆக இருக்கும் இந்த வழித்தடத்தின் கட்டணம், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பண்டிகை காலத்தை முன்னிட்டு ரூ.10,000 வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய நகரங்களுக்கு இடையிலான சில நேரடி விமானங்களின் டிக்கெட் விலை ரூ.25,000 வரையிலும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தீபாவளியை ஒட்டி பயணத் தேவை அதிகரிக்கும் நாட்களில் கட்டணம் மேலும் உயர வாய்ப்புள்ளதாக பயணிகள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது.
விமான டிக்கெட்டுகளின் விலை முன்பதிவு நேரம், பயண தேதிகள், இருக்கைகளின் கிடைப்புத்தன்மை உள்ளிட்ட பல காரணிகளைப் பொறுத்து மாறுபடும். எனவே, பண்டிகை காலத்தில் விமானத்தில் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளவர்கள், கடைசி நேர முன்பதிவை தவிர்த்து முன்கூட்டியே டிக்கெட் எடுப்பது செலவை கட்டுப்படுத்த உதவும் என பயணத் துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
நவராத்திரி மற்றும் தீபாவளி காலத்தில் விமானப் பயணத்துக்கான தேவை உச்சத்தை எட்டும் நிலையில், வரும் வாரங்களில் கட்டண நிலவரம் பயணிகளுக்கு முக்கிய கவலையாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: பண்டிகையை கொண்டாடுங்கடே! கலிபோர்னியாவில் தீபாவளி கொண்டாட்டம்! அமெரிக்கா கொடுத்த அங்கீகாரம்!