×
 

அன்று வெட்டிய அதே இடத்தில்... நெல்லையை உலுக்கிய இரட்டைக்கொலை... பகை வளர்ந்ததன் பகீர் பின்னணி...!

கார் மோதி இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வீரவநல்லூர் போலீசார் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்

வீரவநல்லூர் அருகே தந்தை, சிறுவன் கொலை செய்யப்பட்ட விவகாரம்; தண்ணீர் பிரச்சனைக்காக பழிக்கு பலியாக நடந்த கொலையின் தொடர்ச்சியாக இன்று நடந்த இரட்டை கொலை சம்பவத்துடன் சேர்த்து 9 பேர் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. 

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகேயுள்ள மூலச்சி பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவர் தனது இரண்டு மகன்களுடன் இருசக்கர வாகனத்தில் வீரவநல்லூர் - மூலச்சி சாலையில் தோட்டத்திற்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது வல்லத்து நம்பி குளம் அருகே பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் காரைக் கொண்டு காளிமுத்து சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய காளிமுத்துவை சரமாரியாக வெட்டி தலையை துண்டாக்கி கொலை செய்தது. மேலும் கார் இடித்த சம்பவத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்த காளிமுத்துவின் இரண்டாவது மகன் ஜெயராஜ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னால் இருந்த மூத்த மகன் சின்னத்துரை உடலில் காயங்களுடன் கீழே விழுந்து படுகாயம் அடைந்த நிலையில் அவரை அங்கே விட்டுவிட்டு காளிமுத்துவின் தலையை துண்டாக்கி சிறிது தூரத்தில் நெடுஞ்சாலை பகுதிக்கு கொண்டு சென்று பையில் வைத்துவிட்டு மர்ம கும்பல் தப்பி சென்றது. இந்த நிலையில் சம்பவம் குறித்த தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு சென்ற வீரவநல்லூர் போலீசார் உடல்களை மீட்டு வழக்கு பதிவு செய்து கொலை சம்பவம் தொடர்பான விசாரணையை தீவிர படுத்தியதோடு படுகாயம் அடைந்த சின்னதுரையை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: நெல்லையில் ரத்த வெறி... தந்தை-மகன் கொடூரக் கொலை..! தலையை வெட்டி நடுரோட்டில் வைத்து சென்ற மர்ம கும்பல்..!!

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மூலச்சி பகுதியைச் சேர்ந்த பெருமாள் பாண்டியன் கொலை சம்பவத்தின் பழிக்கு பலியாக இந்த சம்பவம் நடைபெற்று இருப்பது கண்டறியப்பட்டது. கொலை நடந்த இடத்தில் நெல்லை நரக டி ஐ ஜி திருநாவுக்கரசு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் சுப்பிரமணிய சாஸ்திரி உள்ளிட்டோர் ஆய்வு நடத்தி கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டனர் தொடர்ந்து சுமார் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் கொலையாளிகளை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டும், தடைய அறிவியல் நிபுணர்கள் தடையங்களை சேகரித்தும் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் மூலச்சி பகுதியைச் சேர்ந்த சித்திரபுத்திரன்(72) என்பவரும், பெருமாள் பாண்டியன் (45) என்பவரும் உறவினர் ஆவார்கள். கடந்த 2006ம் ஆண்டு சித்ர புத்திரனின் மகன் சுப்பிரமணியனின் மனைவிக்கும் பெருமாள் பாண்டியன் மனைவிக்கும் இடையே ஓடை தண்ணீர் செல்வதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த சூழலில் இந்த முன்விரதம் காரணமாக 2007 ஆம் ஆண்டு சுப்ரமணியனை பெருமாள் பாண்டியன் தரப்பினர் வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக பெருமாள் பாண்டியன் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் கையெழுத்திட சாத்தான்குளம் பகுதியில் தங்கி இருந்தார். அப்போது அவரை சித்ரபுத்திரன் தரப்பினர் 2008 ஆம் ஆண்டு கொலை செய்ய முயன்றனர். அன்றைய தினம் சித்திரபுத்திரன் தரப்பைச் சேர்ந்த பெருமாள், பாபநாசம் ஆகியோரை பெருமாள் பாண்டியன் தரப்பினர் வெட்டி படுகொலை செய்தனர்.

அதே ஆண்டு பெருமாள் பாண்டியனிடம் கொலை தொடர்பான தகவல்களை தெரிவித்ததாக சுப்பையா என்பவரை சித்ரபுத்திரன் தரப்பினர் கொலை செய்தனர். 2009 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பெருமாள் பாண்டியின் உறவினர் சின்னத்தம்பியை சித்திரபுத்திரன் தரப்பினர் கொலை செய்தனர். ஏற்கனவே தப்பிய பெருமாள் பாண்டியனை 2010 ஆம் ஆண்டு கல்லிடைக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த போது சித்திரபுத்திரன் தரப்பினர் வெட்டி படுகொலை செய்தனர். அதாவது தற்போது நடைபெற்ற கொலை சம்பவத்தை போல் அம்பாஸ்டர் காரால் மோதி அப்போது கொலை செய்துள்ளனர். இந்த கொலைக்கு பழிக்கு பலியாக பெருமாள் பாண்டியன் தரப்பினர் சித்திரபுத்திரனின் மருமகன் குமாரை 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திண்டுக்கலில் வைத்து கொலை செய்தனர். மேலும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு வரை இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது அரிவாள் வெட்டு சம்பவங்களும் நடந்துள்ளன. 

பெருமாள் பாண்டியன் கொலையில் கைதான முக்கிய குற்றவாளியான காளிமுத்து மற்றும் அவரது ஐந்து வயது மகனை இன்றைய தினம் மர்ம நபர்கள் பெருமாள் பாண்டிய கொலை செய்தது போல் காரை வைத்து மோதி கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஓடை பிரச்சனை சிறிய வாக்குவாதமாக தொடங்கி முன் விரோதமாக மாறி இதுவரை 9 பேர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.  இரு தரப்பும் சமரசமாக சென்ற நிலையில் மீண்டும் கொலை சம்பவம் நடந்தது எதற்காக என்பது குறித்தான விசாரணையை போலீசார் தீவிர படுத்தி உள்ளனர்..
 

இதையும் படிங்க: நெல்லை ஆட்டோ டிரைவர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்..! ஆதாரங்களை வெளியிட்ட காவல்துறை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share