×
 

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை கண்டறிய இலவச டிஎன்ஏ பரிசோதனை! தமிழக அரசு ஏற்பாடு!

நேபாள பெருவெள்ளத்தில் காணாமல் போன தமிழர்களை அடையாளம் காண சென்னை, மதுரை, தஞ்சையில் இலவச DNA பரிசோதனைக்குத் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போன தமிழர்களை அடையாளம் காண்பதற்கு ஏதுவாக, அவர்களது முதல்நிலை உறவினர்களுக்குச் சென்னை, மதுரை மற்றும் தஞ்சாவூர் தடய அறிவியல் ஆய்வகங்கள் மூலம் கட்டணமின்றி டிஎன்ஏ (DNA) பரிசோதனை செய்ய தமிழ்நாடு அரசு விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 26 அன்று நேபாளத்தில் ஏற்பட்ட கோரப் பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க, தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுடனும் நேபாள அதிகாரிகளுடனும் இணைந்து தீவிர மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகிறது. சென்னை அயலகத் தமிழர் நலத்துறை ஆணையரகத்திலும், புதுதில்லி தமிழ்நாடு இல்லத்திலும் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உதவிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் (செப்டம்பர் 2) நிலவரப்படி, வெள்ளத்தில் சிக்கிய 305 தமிழர்களில் 220 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 85 நபர்களைத் தொடர்புகொள்வதற்கான தேடுதல் வேட்டை களத்தில் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாயமானவர்களை விரைந்து அடையாளம் காணும் நோக்கில், நேபாள அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி முதல்நிலை உறவினர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. காணாமல் போனவர்களின் தாய், தந்தை, மகன் அல்லது மகள் ஆகிய முதல்நிலை உறவினர்களில் (First Degree Relatives) விருப்பமுள்ளவர்கள், தங்களுக்கு அருகாமையிலுள்ள சென்னை (மயிலாப்பூர் இயக்குநர் காஜா மொய்தீன் - 9941464808), மதுரை (மருத்துவக் கல்லூரி வளாக துணை இயக்குநர் விஜயேந்திரன் - 8637674451) மற்றும் தஞ்சாவூர் (வல்லம் சாலை துணை இயக்குநர் ராஜ்மோகன் - 9791112894) ஆகிய மண்டலத் தடய அறிவியல் ஆய்வகங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இலவசமாக ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படும்.

இதையும் படிங்க: காணாமல் போன ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் நிலை என்ன?... தமிழ்நாடு அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு...!

இதற்கான களப் பணிகளை ஒருங்கிணைத்து, பரிசோதனை முடிவுகளை நேபாள அரசின் வலைதளத்தில் உடனடியாகப் பதிவேற்றம் செய்யுமாறு அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்குத் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த விவரங்களுடன் நேபாளத்திற்கு நேரில் செல்ல விரும்பும் உறவினர்களுக்கும் தேவையான பயண மற்றும் நிர்வாக உதவிகளை அரசு முழுமையாகச் செய்து வருகிறது. இதுதொடர்பான மேலதிக தகவல்களுக்கு அயலகத் தமிழர் நல ஆணையரகத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் (18003093793 / 8069009901 / 8069009900) மற்றும் புதுதில்லி தமிழ்நாடு இல்லக் கட்டுப்பாட்டு அறை எண்களைத் (9289516712 / 9868530776) தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மிகப்பெரிய ஷாக்... மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு... நேபாளத்திற்கு மற்றொரு எச்சரிக்கை மணி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share