புதிய தலைமை செயலகம் அட்மினிஸ்ட்ரேஷன் சிட்டியாக அமைய வேண்டும்! பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி பேட்டி!
புதிய சட்டமன்ற வளாகம் ஒரு முழுமையான நிர்வாக நகரமாக அமைய வேண்டும் என்றும், தொப்பூர் பணிகள் ஓராண்டில் முடியும் என்றும் பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி கூறியுள்ளார்.
தமிழகத்திற்குப் புதிய சட்டமன்ற வளாகம் நிச்சயம் தேவை என்றும், அது பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் வகையிலும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் குடியிருப்புகளுடன் கூடிய முழுமையான 'நிர்வாக நகரம்' போல வடிவமைக்கப்பட வேண்டும் என்றும் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் சௌமியா அன்புமணி, மரகதம் வெற்றிவேல், வே. சம்பத்குமார் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசுத் துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தனர்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி, நீண்டகாலக் கோரிக்கையான தொப்பூர் கணவாய் மேம்பாட்டுத் திட்டப் பணிகள் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன; இன்னும் ஓராண்டுக்குள் அனைத்துப் பணிகளும் முழுமையாக முடிவடைந்து மக்களின் பயன்பாட்டிற்கு வரும். தற்போது பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் அப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைச் சீர்செய்யத் தேவையான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்? படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் எதிர்ப்பு!
அதேபோல், மொரப்பூர் - தருமபுரி ரயில் பாதை திட்டத்திற்கான நில எடுப்புப் பணிகளில் 40 சதவீதம் நிறைவடைந்துள்ளது; எஞ்சிய பணிகள் வரும் டிசம்பருக்குள் முடிக்கப்பட்டு, 80 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்ட தகவல்கள் வரும் ஜனவரி மாதத்தில் மாநில அரசால் தெற்கு ரயில்வே துறையிடம் முறைப்படி ஒப்படைக்கப்படும்; அதன் பின் ரயில்வே நிர்வாகம் மேம்பால ஒப்பந்தங்களை இறுதி செய்து பணிகளைத் தொடங்கும் என்று விளக்கினார்.
மேலும் உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்துப் பேசிய அவர், தமிழ்நாட்டில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால், மாவட்ட நிர்வாகமே நேரடியாகக் களமிறங்கி மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பில் உள்ளது.
பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாகக் குடிநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளில் சற்று தாமதம் நிலவினாலும், அவற்றை உடனடியாகத் தீர்த்து வைப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். குறிப்பாக, மாணவர்கள் தடையின்றிப் படிக்க ஏதுவாகக் காலை 6 மணி முதல் 10 மணி வரை தடையற்ற சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என மின்சார வாரியத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து அரசியல் மற்றும் உள்கட்டமைப்பு விவகாரங்கள் குறித்துப் பேசிய சௌமியா அன்புமணி, ஊழலுக்கு எதிராக நாம் அனைவரும் தொடர்ந்து சமரசமின்றிப் போராடி வருகிறோம்; அரசு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வத் தகவல் வெளிவரும்போது அது குறித்து விரிவாகப் பேசலாம். எதிர்வரும் இடைத்தேர்தல் ஆதரவு குறித்துப் பாமக தலைவர் விரைவில் முறைப்படி அறிவிப்பார்.
புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் என்பது பொதுமக்களுக்குப் பயன்தரும் வகையில் அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகளின் குடியிருப்புகளுடன் கூடிய ஓர் ஒருங்கிணைந்த நிர்வாக நகரமாக அமைய வேண்டும். பாமக வலியுறுத்தும் 2 சட்டமன்றங்கள் என்ற திட்டத்தைப் பொறுத்தவரை, மாநிலத்தின் நிதிநிலைமையை முழுமையாகச் சீரமைத்த பிறகு தகுந்த சூழலில் அதனைப் பரிசீலிக்கலாம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெரியார் கொள்கை எனக்கூறிவிட்டு ஊர்வலத்திற்கு தடையா? தவெக அரசை விளாசிய கி.வீரமணி!