×
 

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்? படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் எதிர்ப்பு!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 9 மீனவ கிராம மக்கள் படகுகளில் கருப்புக் கொடி கட்டி ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தவெக அரசின் திட்டத்திற்குப் பட்டினப்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 9 கடலோர மீனவ கிராம மக்கள் மிகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ள நிலையில், அடுத்தகட்ட தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக மீனவ கிராம பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் இன்று போர்க்குணத்துடன் கூடிய தீவிரத்துடன் நடைபெற்றது.

தலைநகர் சென்னையின் கடலோரப் பகுதியான பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமையவிருப்பதாக அரசு அறிவித்துள்ள சூழலில், தங்களின் பாரம்பரிய குடியிருப்பு உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்கள் அடியோடு நசுக்கப்படும் என அஞ்சி மீனவ மக்கள் கொந்தளித்துள்ளனர். 

குறிப்பாக, முள்ளிக்குப்பம் மற்றும் முள்ளிமாநகர் ஆகிய மீனவ மக்களின் பூர்வீகக் குடியிருப்பு நிலப்பகுதிகளிலேயே இந்தப் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதால், அப்பகுதி மக்கள் தங்களின் வாழ்வுரிமை மற்றும் நில உரிமையைப் பாதுகாக்கத் திரண்டுள்ளனர். 

இதையும் படிங்க: ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அபராதம்... பிரதமர் கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்.? மாணிக்கம் தாகூர் சரமாரி கேள்வி.!!

அரசின் இந்தத் திட்டத்திற்குத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக, கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளில் கருப்புக் கொடிகளைக் கட்டி மீனவர்கள் தங்களின் தீவிர கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து சீனிவாசபுரம் கடற்கரையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சென்னை மாவட்டத்திற்குட்பட்ட வடசென்னையின் எண்ணூர் நெட்டுக்குப்பம் தொடங்கி தென்சென்னையின் நைனார்குப்பம் வரையுள்ள அனைத்து மீனவ கிராமப் பஞ்சாயத்து நிர்வாகிகள், சமுதாயத் தலைவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர். 

இக்கூட்டத்தில் பேசிய மீனவ பிரதிநிதிகள், புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டால் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் முள்ளிக்குப்பம், முள்ளிமாநகர் மக்களின் பூர்வீகக் குடியிருப்பு உரிமைகள் அடியோடு பறிபோகும் சூழல் உருவாகும் என்று வேதனை தெரிவித்தனர்.

மேலும், அன்றாடம் கடலுக்குச் சென்று மீன்பிடித்தல், கடற்கரையில் கட்டுமரங்கள் மற்றும் படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்துதல், மீன்பிடி வலைகளைப் பின்னுதல், பிடித்த மீன்களைக் கடற்கரையில் உலர்த்துதல் மற்றும் அன்றாட மீன் விற்பனை உள்ளிட்ட கடலோரப் பூர்வகுடி மக்களின் வாழ்வாதார நடைமுறைகள் அனைத்தும் இந்தப் புதிய கட்டுமானத்தால் முடங்கிப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். 

தங்கள் வாழ்வாதாரத்தை அழித்து அமையவுள்ள புதிய தலைமைச் செயலகத் திட்டத்தை முதலமைச்சர் உடனடியாக அப்பகுதியிலிருந்து கைவிட்டு மாற்று இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும், தவறினால் ஒட்டுமொத்த சென்னை மாவட்ட மீனவ கிராமங்களையும் ஒன்றிணைத்து மாபெரும் தொடர் போராட்டங்கள் வெடிக்கும் என்றும் மீனவ கூட்டமைப்பினர் திட்டவட்டமாக எச்சரித்துள்ளனர்.
 

இதையும் படிங்க: மனித கழிவுகளால் மீன்கள் சாகவில்லை!அமைச்சர் கருத்தை எதிர்த்து 8 கிராம மீனவர்கள் கொந்தளிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share