×
 

நீலகிரியை சூழ்ந்த 'கருப்புப்படை'..!! மர்ம பூச்சியால் பாதிப்பா..!! பதறும் மக்கள்..!!

பகல் நேரங்களில் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், மாலை விளக்குகள் எரியத் தொடங்கியதும் அவற்றின் எண்ணிக்கை பெருகுகிறது.

நீலகிரி மலைப்பகுதிகளில் திடீரென தோன்றிய கருப்பு நிறச் சிறு பூச்சிகளின் படையெடுப்பு, குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட சேலாஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றியுள்ளது. கடந்த சில வாரங்களாக ஆயிரக்கணக்கான இந்தச் சிறிய பூச்சிகள் மாலை நேரங்களில் விளக்குகளின் ஒளியை நோக்கி வட்டமிட்டு, வீடுகள், கடைகள், உணவகங்கள் மற்றும் சாலைகளில் மொய்க்கத் தொடங்கியதால், மக்கள் தங்கள் வீடுகளைச் சிறையைப் போல மூடி வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தப் பூச்சிகள் கடிப்பதில்லை; உடலில் அமர்ந்தாலும் நமைச்சல் அல்லது எரிச்சலை ஏற்படுத்துவதில்லை. இருப்பினும் உணவுப் பொருட்கள், குடிநீர் மற்றும் சமையல் பாத்திரங்களில் விழுந்து மக்களுக்குப் பெரும் சிரமத்தை உருவாக்குகின்றன. “கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்தாலே உள்ளே புகுந்துவிடுகின்றன. சமைப்பதும் சாப்பிடுவதும் கடினமாகிவிட்டது,” என சேலாஸ் வாசிகள் தெரிவிக்கின்றனர். பகல் நேரங்களில் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், மாலை விளக்குகள் எரியத் தொடங்கியதும் அவற்றின் எண்ணிக்கை பெருகுகிறது.

வியாபாரிகளும் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனர். கடைகளுக்குள் பூச்சிகள் மொய்க்கவே, பலர் கடையை அடைத்து வீட்டுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சேலாஸ் வியாபாரிகள் போராட்டத்துக்கு முன்வந்ததால், உள்ளாட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தது.

இதையும் படிங்க: நீலகிரிக்கு ரெட் அலர்ட்! 2 நாட்களுக்கு 60 கி.மீ வேகக் காற்றுடன் கனமழை எச்சரிக்கை!

குன்னூர் நகராட்சி சுகாதாரத் துறை கொசு மருந்து வாகனங்கள் மூலம் புகை தெளித்ததுடன், பிளீச்சிங் பவுடர் தெளித்துப் பூச்சிகளின் பரவலை ஓரளவு கட்டுப்படுத்தியுள்ளது. இந்தப் பூச்சிகள் ஒரு நாள் மட்டுமே உயிர்வாழ்கின்றன. மாலையில் வந்து விளக்குகளில் அமர்ந்தவை காலையில் இறந்து வீட்டு வாசல்களில் குவிகின்றன. இறந்த பூச்சிகளில் இருந்து வாடை வீசுவதால், மக்கள் தினமும் டெட்டால் தெளித்துச் சுத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதே தொல்லை சேலாஸிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிளிஞ்சடா பகுதியிலும் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். ஓடு வீடுகளில் விளக்குகள் இருக்கும் இடங்களில் இந்தப் பூச்சிகள் அதிகம் குவிவதாகவும் தெரிகிறது.

மருத்துவர்கள் இதுவரை இந்தப் பூச்சிகளால் கடி அல்லது நச்சுப் பாதிப்பு ஏற்பட்டு யாரும் மருத்துவமனைக்கு வரவில்லை என உறுதிப்படுத்தியுள்ளனர். வனத்துறைக்கும் இது தொடர்பான எந்தப் புகாரும் வரவில்லை. தற்போது பூச்சித் தொல்லை கணிசமாகக் குறைந்துள்ள போதிலும், மக்கள் இன்னும் உணவுப் பொருட்களையும் ஜன்னல்களையும் மூடியே வைத்துள்ளனர்.

பூச்சியியல் வல்லுநர்கள் இவற்றை ‘சையாரிடே’ குடும்பத்தைச் சேர்ந்த கருஞ்சிறகு பூஞ்சை ஈக்கள் (Dark-winged fungus gnats) என அடையாளம் கண்டுள்ளனர். இவை மனிதர்களுக்கு நேரடி ஆபத்தை ஏற்படுத்தாதவை; நஞ்சையும் வெளியிடுவதில்லை. பெண் பூச்சிகள் ஈரமான மண் மற்றும் அழுகும் கரிமப் பொருட்களில் 200 வரை முட்டைகள் இடுகின்றன. அவற்றின் வாழ்க்கைச் சுழற்சி 21 முதல் 28 நாட்கள் வரை நீடிக்கும்.

இயற்கை வேட்டையாடும் ரோவ் வண்டுகளின் எண்ணிக்கை வேதிப்பூச்சிக்கொல்லிகளால் குறைந்ததே இந்தப் பெருக்கத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வானிலை மாற்றங்களால் இவை இயற்கையாகவே குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஈரப்பதமான இடங்களைத் தூய்மையாக வைத்திருப்பதே தற்காலிகத் தீர்வாக அறிவுறுத்தப்படுகிறது.

இதையும் படிங்க: அடையாளம் தெரியாத நபரால் தொடரும் தொல்லை! சென்னை மேயர் பிரியா புகரால் பரபரப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share