×
 

ஸ்டாலினை புதைக்கலாம்.. என் திட்டங்களை முடியாது! எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்!

இந்த ஸ்டாலினுக்கும் மரணம் வரும்... ஆனால் என் திட்டங்கள் காலத்தால் அழியாது என உருக்கம்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்கு மிகக் கடுமையான மற்றும் உணர்ச்சிகரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். என் திட்டங்களை மண்ணில் புதைக்க யாராலும் முடியாது என அவர் மேடையிலேயே சவால் விடுத்தார்.

தனது ஆட்சி மற்றும் திட்டங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த முதல்வர் இந்த ஸ்டாலினுக்கும் ஒருநாள் மரணம் வரும். என்னை இந்த மண்ணில் புதைப்பார்கள். ஆனால், நான் சவால் விட்டுச் சொல்கிறேன்... இந்த ஸ்டாலின் கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை மண்ணில் புதைக்கிற துணிச்சல் இந்த உலகத்தில் ஒருவருக்கும் வராது என ஆக்ரோஷமாகப் பேசினார். மக்களின் நெஞ்சங்களில் குடிபுகுந்த திட்டங்களை எந்த அரசியல் சக்தியாலும் அழித்துவிட முடியாது என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

அதிமுக பொதுச்செயலாளரின் பரப்புரையைச் சுட்டிக்காட்டிய அவர் பழனிசாமி அவர்களே, ஆட்சி அதிகாரம் என்பது மக்களுக்காகச் செயல்பட வேண்டுமே தவிர, வீண் விமர்சனங்களுக்காக அல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளில் நாங்கள் செய்த சாதனைகள் ஒவ்வொரு வீட்டிலும் பேசப்பட்டு வருகிறது. அதை உங்களால் மறைக்க முடியாது என்றார். அடிமை அரசியல் செய்பவர்களுக்கு மக்கள் நலத் திட்டங்களின் அருமை தெரியாது என மீண்டும் 'அடிமை' விமர்சனத்தை முன்வைத்தார்.

இதையும் படிங்க: தமிழக தேர்தல் 2026: வேட்புமனுவை திரும்ப பெற இன்றே கடைசி! மாலை 3 மணிக்கு இறுதி பட்டியல்!

தமது ஆட்சியின் மைல்கற்களாகக் கருதப்படும் விடியல் பயணம் (மகளிர் இலவசப் பேருந்து), கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் காலை உணவுத் திட்டம் ஆகியவற்றைப் பட்டியலிட்ட முதல்வர்: இந்தத் திட்டங்கள் இன்று பல லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மாற்றியுள்ளது. இதைப் போய் யாராவது புதைக்கத் துணிவார்களா?" என வினவினார்.

தேர்தல் களம் குறித்துப் பேசிய அவர், எதிர்வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி மக்கள் தகுந்த தீர்ப்பளிப்பார்கள். பொய்ப் பிரச்சாரங்களை மக்கள் நம்ப மாட்டார்கள். திராவிட மாடல் ஆட்சி மீண்டும் மலர்வதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறித் தனது உரையை முடித்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தனது மரணம் மற்றும் திட்டங்கள் குறித்துப் பேசிய இந்த உருக்கமானப் பேச்சு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க: நாட்டையே ஆள்கிறவருக்கு எவ்வளவு பவர் இருக்கும்! வில்லிவாக்கத்தில் எடப்பாடி பழனிசாமி 'பவர்ஃபுல்' பேச்சு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share