×
 

சட்டப்பேரவையில் மனம்வருந்தி மன்னிப்பு கேட்கணும்! அமைச்சர் மரியவில்சனுக்கு சீமான் எச்சரிக்கை!

சட்டப்பேரவையில் தமிழை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் மரியவில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனச் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகச் சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை வாசிக்கும்போது தமிழைத் தவறாக உச்சரித்ததைச் சுட்டிக்காட்டியபோது, தமிழ் அன்பைப் போதிக்கவில்லை எனக் கூறிய நிதிமைச்சர் மரியவில்சன், அன்னைத் தமிழை அவமதித்ததற்காகச் சட்டப்பேரவையிலேயே மனம்வருந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சட்டமன்றத்தில் நிகழ்ந்தது: சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மற்றும் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, நிதியமைச்சர் மரியவில்சன் எண்களையும் சொற்களையும் பிழையாக வாசித்ததைச் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் சுட்டிக்காட்டினார். அதற்குப் பதிலளித்த நிதியமைச்சர், தனது பிழையைத் திருத்திக் கொள்ளாமல், "நான் பிறப்பால் கிறிஸ்தவன், அதுவே எனக்கு அன்பைப் போதித்தது; எவ்வளவு தமிழ் படித்தாலும் அன்பைப் போதிக்காது" எனப் பேசியது அதிகாரத் திமிரின் உச்சம் எனச் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ், யாதும் ஊரே யாவரும் கேளிர், மற்றும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் போன்ற உயரிய தத்துவங்களை உலகிற்கு முதன்முதலில் போதித்த ஒரே மொழி தமிழ்மொழிதான். வள்ளலார், வைகுண்டர் மற்றும் பாரதியார் போன்ற சான்றோர்கள் அன்பையே பிரதான நெறியாகக் கொண்டு வாழ்த்தத் தமிழ் மண்ணில், தமிழ் அன்பைப் போதிக்கவில்லை எனக் கூறுவது முற்றிலும் தவறானது.

இதையும் படிங்க: பங்குச்சந்தை முதலீடு ஆலோசகர் கைது..! அதிகாரத்தை திணிப்பதா.? சீமான் ஆவேசம்.!

கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப வந்த ஜி.யு.போப் மற்றும் வீரமாமுனிவர் போன்ற மாமனிதர்கள் தமிழின் பெருமையை உணர்ந்து, தமிழுக்குத் தொண்டாற்றி மறைந்த வரலாற்றை அமைச்சர் நினைவில் கொள்ள வேண்டும்.

மனிதனின் உண்மையான அடையாளம் அவனது தாய்மொழியும் இனமுமே தவிர, அவன் ஏற்கும் மதம் அல்ல. மதம் மாறக்கூடியது; ஆனால் மொழியும் இனமும் மாற முடியாதது என்ற அடிப்படை உண்மையை உணராமல், தனது பிழைக்கு மதத்தை உள்ளிழுத்துத் தப்பிக்க முயல்வது மலிவான அரசியல்.

அன்னைத் தமிழையும் தமிழ் தேசிய இனத்தையும் அவமதிக்கும் வகையில் பேசிய நிதியமைச்சர் மரியவில்சன், சட்டப்பேரவையிலேயே தனது பேச்சுக்கு மனம்வருந்தி பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் எனச் சீமான் தனது அறிக்கையில் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: இடைத்தேர்தல் எப்போது வைப்பார்கள்..?? வெறிகொண்டு வெயிட்டிங்கில் இருக்கேன்..!! சீமான் காட்டம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share