கூட்டணி வெக்காமையே என்னால ஜெயிக்க முடியும்..!! ஒரே போடு போட்ட சீமான்..!!
தமிழ்நாட்டில் கூட்டணி வைக்காமல் என்னால் வெற்றி பெற முடியும் என்று காட்டுகிறேன் என சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை சின்னமலை பகுதியில் நேற்று இரவு 'எது அரசியல்?' என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், வரும் சட்டமன்றத் தேர்தலில் சென்னை தொகுதிகளில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் உட்பட மயிலாடுதுறை மற்றும் ஆலந்தூர் தொகுதி வேட்பாளர்களையும் மேடையில் அறிமுகப்படுத்தி, சீமான் மக்களிடம் வாக்கு கோரினார்.
கூட்டத்தில் உரையாற்றிய சீமான், தற்போதைய அரசியல் நிலவரத்தை கடுமையாக விமர்சித்தார். நான்கு முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், ஐந்தாவது முறையாக தனித்துப் போட்டியிடுவதாக அவர் குறிப்பிட்டார். தமிழக மக்கள் தற்போது அடிமை நிலையில் வாழ்வதாகவும், அரசியல் என்பது இலவசங்கள் வழங்குவதற்கான கருவியாக மாறிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். “நாட்டின் அரசியல் தலைவர்களை ஜாதி, மதம், பணம், சாராயம் ஆகியவைதான் தீர்மானிக்கின்றன என்றால், அதை எப்படி உண்மையான அரசியல் என்று அழைக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
தேர்தல் பிரசாரப் பகுதிகளில் பணம் விநியோகம் நடப்பதை கடுமையாக விமர்சித்த அவர், “ஒரு தெருவில் 2,000 ரூபாய் கொடுத்துவிட்டார்கள்; மற்றொரு தெருவில் கொடுக்கவில்லை என்று போராடுபவர்களும் உள்ளனர்” என்று சாடினார். ரூ.2 ஆயிரம் கொடுப்பவர் மக்களுக்கு உண்மையான சேவை செய்ய வருவாரா? மக்களுக்கு சேவை செய்பவன் ஏன் பணம் கொடுக்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: ஆஷா, ஸ்வீட்டீ, மேக்ஸ் ஓய்வு! சென்னை விமான நிலையத்தில் புதிதாக பணியில் சேர்ந்த 3 'ஸ்நைப்பர்' நாய்கள்!
மேலும், தமிழக அரசு பெண்களுக்கு வழங்கும் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை திட்டத்தை சுட்டிக்காட்டி, இதன்மூலம் அரசு ரூ.6,800 கோடி இழப்பை சந்திப்பதாகவும், ஒரே நேரத்தில் மத்திய அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகள் மூலம் 1.31 கோடி பெண்களுக்கு பணம் செலுத்தப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார். திமுகவும் பாஜகவும் கூட்டு களவாணிகள் என்று குற்றஞ்சாட்டிய அவர், தமிழகத்தில் உண்மையான மக்கள் அரசியல் இல்லை என்றும் வலியுறுத்தினார்.
மேலும், மத்திய அரசு ரூ.10 ஆயிரம் வரை கொடுத்தாலும், திமுக அரசு 3 தவணைகளாக ரூ.8 ஆயிரம் வழங்கியுள்ளதை விமர்சித்த சீமான், "இது மக்களுக்கான அரசியல் அல்ல; அரசு பணத்தைப் பயன்படுத்தி வாக்குகளை வாங்கும் மோசடி" என்று கண்டனம் தெரிவித்தார். இத்தகைய செயல்பாடுகள் மூலம் கட்சிகள் தங்கள் வாக்கு வங்கியை உறுதி செய்வதாகவும், இது மிகப்பெரிய கொடுமை என்றும் வன்மையாகக் கூறினார்.
ஆட்சிக்கு வந்தால் பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கி, தூய தமிழர் நாடு உருவாக்கப்படும் என்று அறிவித்தார். கூட்டணி அமைப்பதே மற்ற கட்சிகளுக்கு பெரும் பிரச்னையாக இருப்பதாகக் கூறிய அவர், திமுகவும் அதிமுகவும் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்றார். “பாஜக வரக்கூடாது என்று சொல்பவர்கள், காங்கிரஸ் வரலாமா? காங்கிரஸை எப்படி புனிதப்படுத்துகிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினார். கச்சத்தீவு ஒப்படைப்பு போன்ற தீய திட்டங்களுக்கு காங்கிரஸ் கட்சியினரே கையெழுத்திட்டதாகவும் சாடினார்.
உரிமைத் தொகை, கருணைத் தொகை, குருணைத் தொகை போன்றவை எதுவும் இருக்காது என்றும், முழுமையான ஆட்சி முறை மாற்றம் தேவை என்றும் வலியுறுத்தினார். முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தொகுதிகளில் பணம் கொடுக்காமல் ஒரு வாக்கு கூட கிடைக்குமா என்று சவால் விடுத்த அவர், “அவர்கள் வீட்டிலேயே பணம் வாங்காமல் வாக்களிப்பார்களா என்பது சந்தேகமே” என்று கிண்டலடித்தார்.
பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக போன்ற கட்சிகளின் கொள்கைகள் மாறாது என்றும், கொடிகளில் மட்டுமே வண்ண மாற்றம் ஏற்படுவதாகவும் விமர்சித்தார். கூட்டணி இன்றி வெற்றி பெற முடியுமா என்ற கேள்விக்கு, "கொஞ்சம் பொறுத்திருங்கள்; எப்படி வெற்றி பெறுவது என்பதை நாங்கள் காட்டுகிறோம்" என்று தைரியமாக பதிலளித்தார்.
நாம் தமிழர் கட்சி மட்டுமே பணம் கொடுக்காமல் 36 லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய சீமான், "நம்முடைய உரிமைகளை விற்கக் கூடாது. ரூ.500 அல்லது ரூ.1,000-க்கு ஓட்டு விற்பவர்கள், அவர்கள் ஓட்டு வாங்கி நாட்டையே விற்கிறார்கள்" என்று குறிப்பிட்டார். மக்கள் தங்கள் ஓட்டை யாருக்கு அளித்தால் நாடும் மக்களும் நலமடையும் என்பதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நல்லாட்சி மலர வேண்டும் என நினைப்பவர்கள் நம்மை கைவிட மாட்டார்கள். அநீதியும் அக்கிரமமும் அதிகரிக்கும் போது மக்கள் தன்னைத் தேடி வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், இந்தத் தேர்தல் களம் நம் கையில் உள்ளது" என்று நம்பிக்கை தெரிவித்து உரையை நிறைவு செய்தார். கூட்டத்தில் ஆர்வமுடன் கலந்துகொண்ட தொண்டர்கள் சீமானின் பேச்சை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
இதையும் படிங்க: மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!