பணநாயகத்தை வீழ்த்த நிதி தாருங்கள்! 2026 தேர்தலுக்காக சீமான் உருக்கமான வேண்டுகோள்!
எப்போதும் போல் இயன்ற நிதியை கொடுத்து உங்கள் பிள்ளைகளின் கைகளை வலிமைப்படுத்த வேண்டும் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பணிகளுக்காகப் பொதுமக்கள் மற்றும் உலகத்தமிழர்களிடம் நிதி உதவி கோரி அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். எப்போதும் போல இந்தத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி எந்தக் கூட்டணியும் இன்றி, மக்களை மட்டுமே நம்பி 234 தொகுதிகளிலும் தனித்து நிற்கிறது. அதிகாரம் செலுத்தி, ஊழல் பணத்தைப் பதுக்கி வைத்துள்ள கட்சிகள் மீண்டும் அந்தப் பணத்தை முதலீடு செய்து வாக்குகளை விலைக்கு வாங்கத் துடிக்கின்றன.
கேடுகெட்ட இந்த பணநாயகத்தைச் வீழ்த்தி, மாண்புமிக்க உண்மையான ஜனநாயகத்தைத் தமிழக மண்ணில் மலரச் செய்ய நாம் தமிழர் பிள்ளைகள் களத்தில் நிற்கிறோம். இந்தப் போர் அறத்தின் வழி நின்றாலும், இதற்கான பயணச் செலவுகளுக்குப் பொருளாதாரத் தேவை அவசியமாகிறது.
பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்யத் தயாராக உள்ள நிலையில், எளிய மக்களின் பிள்ளைகளான எங்களை வலிமைப்படுத்த உங்கள் இயன்ற நிதியை வழங்குங்கள். துளித்துளியாய் இணைந்து ஒரு புதிய அரசியல் வரலாற்றைப் படைப்போம் என அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: புதுச்சேரி தேர்தல் களம்: 28 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்!
விருப்பமுள்ளவர்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான donate.naamtamilar.org வாயிலாகத் தங்களது பங்களிப்பை வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் (117 ஆண்கள், 117 பெண்கள்) சீமான் அறிமுகம் செய்துவிட்டார். தற்போது தொகுதி வாரியாகப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள நிலையில், போதிய நிதி ஆதாரம் இல்லாதது தங்களுக்குப் பெரும் சவாலாக இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: கூட்டணி வெக்காமையே என்னால ஜெயிக்க முடியும்..!! ஒரே போடு போட்ட சீமான்..!!