×
 

திமுகவை வீழ்த்த விஜய் ஒருவரால் தான் முடியும்! சேலத்தில் செங்கோட்டையன்  பேட்டி!

2026-ல் தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் அமருவது உறுதி என்று, சேலம் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி தமிழக அரசியலில் ஒரு புதிய வரலாற்றை படைக்கும் என்றும் தமிழக வெற்றி கழகத்தின் உயர் மட்ட நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், சேலம் மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகளைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இதற்கானப் பணிகளை நேரில் ஆய்வு செய்த தவெக உயர் மட்ட நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கட்சியின் வளர்ச்சி மற்றும் ஆளுங்கட்சியின் மீதானக் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் காரசாரமாகப் பேசினார்.

சேலம் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்காகக் காவல்துறை விதித்துள்ள அனைத்து நிபந்தனைகளும் மிகக் குறுகிய காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. வருகை தரும் நிர்வாகிகள் அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, முதியவர்கள், குழந்தைகள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் நேரில் வருவதைத் தவிர்த்து, தொலைக்காட்சியில் நேரலையில் காண வேண்டும் எனத் தவெக சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விசில் தியேட்டருக்கு தான் லாயக்கு! விஜய்யை மறைமுகமாக சாடிய சி.வி. சண்முகம்!

தமிழக மக்கள் ஒரு பெரிய மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த மாற்றத்தை உருவாக்குவதற்கும், திமுக-வை வீழ்த்துவதற்கும் விஜய் ஒருவரால் மட்டுமே முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பார்; அப்போதுதான் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு முழுமையாகப் பாதுகாக்கப்படும். இன்றைய திமுக அரசு அராஜகப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

சென்னையில் எமது நிர்வாகிகள் மீது நடத்தப்பட்டத் தாக்குதல் குறித்துத் தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். யார் யாரைத் தாக்கினார்கள், யார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது வெளிப்படையானது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட எமதுப் நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிக்கும் உரிமையைக் கூடத் தடுக்கப் பார்க்கிறார்கள். மக்கள் குறை கேட்கிறார்கள் என்றால் மக்களே தாக்குவார்களா? இது முழுக்க முழுக்க திமுக-வின் திட்டமிட்ட அராஜகம். இதற்குத் தலைவர் விஜய் உரிய நேரத்தில் பதில் சொல்வார்.

தலைவர் விஜய் நாளை (பிப். 12) சேலத்திற்கு எவ்வாறு வருகை தருவார் என்பது குறித்த முழுமையானத் தகவல்கள் நாளை காலை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள கே.வி.பி கார்டனில் நடைபெறவுள்ள இந்த நிர்வாகிகள் சந்திப்பில் சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 70 நாட்களில் தெருநாய் பிரச்சினை தீரும்! தவெக கருத்து கேட்பு கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் உறுதி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share