×
 

வெள்ளை அறிக்கையால் எதிர்க்கட்சியினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் - நிதி அமைச்சர் மரிய வில்சன் அதிரடி!

நிதித்துறை வெளியிட்ட வெள்ளை அறிக்கையால் எதிர்க்கட்சியினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

நிதித்துறை சார்பில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை முற்றிலும் உண்மையானது என்றும், அதன் காரணமாகவே எதிர்க்கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்து, சட்டமன்றத்தில் முதலமைச்சரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் வெளியேறி வருவதாகவும் நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில், அமைச்சர் மரிய வில்சன் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளின் உத்தியோகபூர்வ ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி, காவல்துறை, மின்சாரத்துறை, குடிநீர் வாரியம் (மெட்ரோ வாட்டர்) மற்றும் பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த உயர்தர அதிகாரிகள் கலந்துகொண்டு, தொகுதியின் உள்கட்டமைப்புத் தேவைகள் மற்றும் மக்கள் பிரச்சினைகள் குறித்து அமைச்சரிடம் விரிவாக விவரித்தனர்.

ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த நிதி அமைச்சர் மரிய வில்சன் பேசியதாவது: "தண்டையார்பேட்டை தொகுதி மேம்பாடு குறித்த இந்த முதற்கட்ட ஆய்வுக் கூட்டத்தில் சாலை, மெட்ரோ வாட்டர், கழிவுநீர் அகற்றம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு விபரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இன்னும் மூன்று மாதங்களில் மழைக்காலம் தொடங்கவுள்ளதால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் ஒழிப்பு குறித்தும் அதிகாரிகளுக்குக் கறாரான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன."

இதையும் படிங்க: வெள்ளை அறிக்கை இல்ல.. வெளுத்துப்போன அறிக்கை.. விளாசிய TTV தினகரன்..!!

தொடர்ந்து, பள்ளி நிகழ்ச்சிகளில் மக்கள் பிரதிநிதிகளைத் தவிர மற்றவர்கள் பங்கேற்கக் கூடாது என்று சென்னை மேயர் பிரியா பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "பள்ளிகள் என்பவை மிகவும் உணர்வுப்பூர்வமான (Sensitive) இடங்கள் ஆகும். எனவே, அங்கு பள்ளிக் கல்வித்துறை நிகழ்ச்சிகளுக்குக் கட்சிக்காரர்கள் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) தாராளமாகச் செல்லலாம்" என்று குறிப்பிட்டார்.

மேலும், சட்டமன்றத்தில் முதலமைச்சரின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் தெரிவித்து வரும் விமர்சனங்கள் மற்றும் மின் துறையில் இன்று வெளியிடப்பட்டுள்ள வெள்ளை அறிக்கை குறித்துப் பேசிய அமைச்சர், "நான் நிதித்துறை சார்பில் வெளியிட்ட வெள்ளை அறிக்கை முற்றிலும் உண்மையானது. இதனால் எதிர்க்கட்சியினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் (Hurt). கடந்த காலங்களில் ஏன் இவ்வளவு கோடி கடன் வந்தது என்ற கேள்விக்கு அவர்களால் எவ்வித பதிலும் சொல்ல முடியவில்லை. அதனால்தான் முதலமைச்சரின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் அவர்கள் அவையை விட்டு வெளியேறுகிறார்கள். முதலமைச்சர் உத்தரவிட்டால், வரும் நாட்களில் மற்ற துறைகளிலும் இதேபோல் வெள்ளை அறிக்கைகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்" என்று தெரிவித்தார்.

 

இதையும் படிங்க: "இது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை!" – தங்கம் தென்னரசு கடும் விமர்சனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share