திமுகவுடன் கூட்டணியா? - மெளனம் கலைத்த ஓபிஎஸ்... வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்...!
திமுகவில் இணைய போவதாக வதந்தி பரப்புகின்றனர் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.
அடுத்த ஆண்டு தேர்தல், கூட்டணி பேச்சுவார்த்தை, பிரசாரம்... என தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும்போது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலினை, ஓ.பன்னீர்செல்வம் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கே நேரில் சென்று நலம் விசாரித்தார். இதனையடுத்து பாஜக, அதிமுக மீது அதிருப்தியில் ஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
தற்போது அதற்கு முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டடிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியவர்களை அவர்களது இல்லம் தேடி சென்று நலம் விசாரிப்பதும், உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து துக்கம் விசாரித்து அஞ்சலி செலுத்துவதும் தமிழ் பண்பாடு என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அந்த வகையில முதலமைச்சர் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல்வேறு சிகிச்சைகளுக்கு பிறகு பூரண குணமடைந்து இல்லம் திரும்பிய நிலையில், அவரது வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்தேன் என்றும் இதே போன்று அவரது மூத்த சகோதரர் மு.க.முத்து அவர்கள் மறைவு குறித்த இரங்கல் தெரிவித்தேன் என்றும் இந்த சந்திப்பு தமிழ் பண்பாட்டின் வெளிப்பாடு எனக்குறிப்பிட்டுள்ளார்.
என்னுடைய மனைவியும் என்னுடைய தாயாரும் இறந்தபோது என்னை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியவர் முதலமைச்சர் அவர்கள் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த சந்திப்பில் எந்தவித அரசியலும் இடம்பெறவில்லை என்று முதலமைச்சருடனான சந்திப்பு குறித்து அந்த விளக்கத்தை கொடுத்திருக்கிறார். ஆனால் இந்த சந்திப்பை வைத்து என்னை திமுகவின் பி டீம் என்றும், நான் திமுகவுடன் கூட்டணி வைக்க போவதாகவும், திமுகவில் இணைய போவதாகவும் பல்வேறு வதந்திகளை சமூக வலைதலங்கள் வாயிலாக பரப்பும் நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: என்மேல தப்பு இல்லங்க... மறுக்கும் நயினார்! ஆதாரத்தை காட்டிய ஓபிஎஸ்.
பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்களிலும் இது குறித்த செய்திகள் கற்பனையாக வெளியிட்டு வருகின்றனர். இதில் எள்ளளவும் உண்மைில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெளிவுபடுத்தி இருக்கிறார். மேலும் என்னை பொறுத்தவரையில் எம்ஜிஆர் மற்றும் புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களினுடைய வழியில் பயணிப்பவன் நான் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலிலும் அதிமுக, அதாவது அம்மா அவர்களின் ஆட்சியை அமைய வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் அதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் என்பதையும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: NDA கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறியதால் வருத்தம்... டிடிவி தினகரன் பேட்டி