×
 

மூன்றாவது நாளாக தொடரும் கரூர் தூய்மை பணியாளர்கள் போராட்டம்! முதல்வர் தலையிடக் கோரிக்கை!

அரசாணை 62-ன்படி ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கரூர் மாநகராட்சி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் 3-வது நாளாக இரவிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசாணை எண் 62-ன் படி ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூர் மாநகராட்சி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் மூன்றாவது நாளாக இரவிலும் தொடர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது நியாயமான கோரிக்கைகள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள பணியாளர்கள், தமிழக முதல்வர் இதில் நேரடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இப்போராட்டத்திற்கு ஆதரவாகத் தூய்மைப் பணி வாகன ஓட்டுநர்களும் களமிறங்கியுள்ளது மாநகராட்சி நிர்வாகத்திற்குப் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாநகராட்சியின் 48 வார்டுகளிலும் 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அரசாணை எண் 62-ன்படி ஊதியம் வழங்குவதுடன், பணிச்சுமையைக் குறைக்க வேண்டும், போனஸ் வழங்க வேண்டும், ஞாயிற்றுக்கிழமைகளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும், மற்றும் முறையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 7-ஆம் தேதி முதல் இவர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாநகராட்சி ஆணையர் அலட்சியமாகப் பதிலளிப்பதாகக் குற்றம் சாட்டி, மாநகராட்சி அலுவலகம் முன்பாக இரவிலும் அங்கேயே தங்கிப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடி கப்பல் கட்டும் தளத்திற்கு எதிர்ப்பு! உப்பளங்களில் கருப்புக்கொடி ஏந்தி தொழிலாளர்கள் போராட்டம்!

இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சுமார் 120 தூய்மைப் பணி வாகன ஓட்டுநர்களும் பணியைப் புறக்கணித்துக் காத்திருப்புப் போராட்டத்தில் இணைந்துள்ளனர். இதனிடையே, பிற மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்படும் பணியாளர்களுக்கு வாகனங்களை இயக்க வேண்டும் என்று தங்களைக் கட்டாயப்படுத்துவதாக மாநகராட்சி நிர்வாகத்தின் மீது ஓட்டுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இவர்களின் போராட்டத்திற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
 

இதையும் படிங்க: உரிமைக்காக போராடிய விவசாயிகள் கைது! தவெக அரசை கண்டித்து கனிமொழி எம்.பி ஆவேசம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share