ஹை அலர்ட்! சென்னை, மதுரைக்கு வெப்பஅலை ஆபத்து!? ஆக்ஸ்போர்டு பல்கலை ஆய்வில் பகீர்!
உலகளவில் கடும் வெப்ப அலை அபாயம் அதிகம் உள்ள நகரங்கள் குறித்த ஆக்ஸ்போர்டு பல்கலை ஆய்வில், தமிழகத்தின் சென்னை, மதுரை உள்ளிட்ட 14 நகரங்கள் முதல் 50 இடங்களில் இடம்பெற்றுள்ளன.
உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், கடும் வெப்ப அலை அபாயம் அதிகம் உள்ள நகரங்கள் குறித்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வு புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வில், தமிழகத்தின் சென்னை, மதுரை உள்ளிட்ட 14 இந்திய நகரங்கள் உலகின் அதிக வெப்ப அபாயம் உள்ள முதல் 50 நகரங்களின் பட்டியலில் இடம்பெற்றிருப்பது கவலை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், உலகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 205 நகரங்களை ஆய்வுக்கு உட்படுத்தினர்.
வெப்ப அலை காரணமாக மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், நகரங்களின் சுற்றுச்சூழல், மக்கள் அடர்த்தி மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மதிப்பீடு செய்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள், 'சஸ்டெயினபிள் சிட்டீஸ் அண்டு சொசைட்டி' என்ற சர்வதேச அறிவியல் இதழில் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: கடும் நிதி நெருக்கடியில் திணறும் சென்னை மாநகராட்சி! சம்பளம் போடவே திண்டாட்டம்!!
ஆய்வில், ஒரு நகரின் வெப்ப அபாயத்தை வெறும் அதிக வெப்பநிலை மட்டுமே தீர்மானிக்காது என்றும், அங்கு வாழும் முதியோர் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை, பொருளாதார சூழல், உடல்நல பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயம், குளிரூட்டும் வசதிகளின் கிடைக்கும் நிலை, நகரில் உள்ள மரங்களின் அடர்த்தி மற்றும் பசுமைப் பரப்பு போன்ற காரணிகளும் முக்கிய பங்கு வகிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக அளவில் வெப்ப அலையால் மிக அதிக ஆபத்து உள்ள நகரமாக ஈராக் நாட்டின் அல் பஸ்ரா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் குஜராத் மாநிலம் ஆமதாபாத் இரண்டாவது இடத்திலும், மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் பமாகோ மூன்றாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளன.
மேலும், இந்தியாவிலிருந்து சென்னை, மதுரை உள்ளிட்ட மொத்தம் 14 நகரங்கள் முதல் 50 இடங்களுக்குள் இடம்பெற்றிருப்பது, நாட்டின் நகர்ப்புறங்களில் வெப்ப அலை அபாயம் அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது.
நிபுணர்களின் கருத்துப்படி, நகரங்களில் மரங்களை அதிகரித்தல், நீர்நிலைகளை பாதுகாத்தல், பசுமைப் பகுதிகளை விரிவுபடுத்தல், வெப்ப அலை முன்னெச்சரிக்கை திட்டங்களை வலுப்படுத்தல் மற்றும் முதியோர், குழந்தைகள் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல் அவசியமாகியுள்ளது.
பருவநிலை மாற்றத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், எதிர்கால நகர திட்டமிடலில் வெப்ப அபாயத்தை குறைக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: தலைமை செயலகமா? தவெக அலுவலகமா? முதல்வர் விஜய்க்கு வானதி சீனிவாசன் கேள்வி!