பழனி ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: பத்திர எழுத்தரை காவலில் எடுக்க சிபிசிஐடி மனு!
மேலும் ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தண்டபாணி மடத்துக்கு சொந்தமானதாக கூறப்படும் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், முக்கிய குற்றச்சாட்டுக்குள்ளான பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று (செப்.19) நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், ஜெயபிரகாஷ் மீண்டும் செப்.22-ம் தேதி ஆஜர்படுத்தப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பழனி தண்டபாணி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பழனி அடிவார போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு கடந்த ஜூன் மாதம் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
இதையும் படிங்க: கொலையா? ஆணவப் படுகொலையா? மதுரையில் மாணவன் மரணம் குறித்து கொந்தளித்த மக்கள்! போலீஸுடன் தள்ளுமுள்ளு!
வழக்கை கையில் எடுத்த சிபிசிஐடி போலீசார், இதுதொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த பத்திர எழுத்தரும், இடைத்தரகருமான ஜெயபிரகாஷ் முக்கிய நபராக விசாரணை வளையத்துக்குள் வந்தார்.
இதையடுத்து ஜெயபிரகாஷ் கடந்த மாதம் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், வழக்கில் மேலும் விசாரணை நடத்த வேண்டியிருப்பதாக கூறி ஜெயபிரகாஷை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் குற்றவியல் நீதிமன்றம் எண் 2-ல் மனு தாக்கல் செய்தனர். ஆனால், முதலில் ஒரு நாள் மட்டுமே போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.
ஒரு நாள் விசாரணை போதுமானதாக இல்லை என்றும், வழக்கு தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு முழுமையான பதில்கள் கிடைக்கவில்லை என்றும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து
மேலும் ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு இன்று நீதிபதி பத்மநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து மதுரை மத்திய சிறையில் இருந்து ஜெயபிரகாஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெயபிரகாஷை வரும் 22-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர் மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் தொடர்பான இந்த வழக்கில் அடுத்தகட்ட நீதிமன்ற நடவடிக்கை மற்றும் சிபிசிஐடி விசாரணை மீது தற்போது கவனம் திரும்பியுள்ளது.
இதையும் படிங்க: மதுரையில் அதிகாலை பயங்கரம்: போலீஸ் நிலையம் அருகே ஓட ஓட விரட்டி கொலை! கும்பல் வெறிச்செயல்!