பழனி கோவில் நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை வீட்டை ‘சுத்து’ போட்ட சிபிசிஐடி.. சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!
பழனி கோவில் நிலமோசடி வழக்கு; மடத்துக்குளத்தில் வெள்ளத்துரை வீட்டில் 5 மணி நேரம் சிபிசிஐடி தீவிர சோதனை; முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாக இருக்கிறது. இந்த கோவிலுக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் 2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்து மோசடி செய்யப்பட்ட விவகாரம் தமிழக முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், போலி பிரமுகர்கள் முருகதாஸ் உள்ளிட்ட நான்கு பேர் மீது புகார் அளித்தார். காவல்துறையினர் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கினர்.
தமிழக அரசு கடந்த 15ஆம் தேதி இந்த வழக்கின் தன்மையை அறிந்து சிபிசிஐடி மாற்றியது. அதனைத் தொடர்ந்து பழனி உடுமலைப்பேட்டை திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்த வழக்கை தொடர்புடையவர்கள் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் அதிரடியாக சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பழனி நில மோசடி: சமையல்காரர் வீட்டிற்குள் தடாலடியாக நுழைந்த சிபிசிஐடி... கதவு, ஜன்னல்களை அடைத்து ரகசிய விசாரணை... பின்னணி என்ன?
அதன் தொடர்ச்சியாக, பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் நிலமோசடி வழக்கில் தொடர்புடைய வெள்ளத்துரையின் வீட்டில், சிபிசிஐடி போலீசார் கடந்த 5 மணி நேரத்திற்கும் மேலாக மேற்கொண்ட அதிரடிச் சோதனையை முடித்துவிட்டு, முக்கிய ஆவணங்களுடன் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.
இந்த மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள வெள்ளத்துரையைத் தேடி வரும் சிபிசிஐடி காவல் துறையினர், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள பாப்பான்குளத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிரடிச் சோதனையை மேற்கொண்டனர்.
சிபிசிஐடி ஆய்வாளர் கேசவன் தலைமையிலான ஏழு பேர் கொண்ட போலீசார், மற்றும் மடத்துக்குளம் பகுதியை சார்ந்த வருவாய் துறையினருடன் கடந்த 5 மணி நேரத்திற்கும் மேலாக வீட்டின் ஒவ்வொரு அறையிலும் தீவிர சோதனை நடத்தினர்.
சோதனையின் போது, தலைமறைவாக உள்ள வெள்ளத்துரையின் மகன் சுர்ஜித் மற்றும் உறவினர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற இந்த சோதனையின் முடிவில், நிலமோசடி தொடர்பான முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், அவற்றைப் பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர். இந்த அதிரடி நடவடிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் பழனி கோயில் நில மோசடி விவகாரம்... சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு இறுகும் பிடி...!