×
 

#BREAKING பழனியில் அடுத்த அதிர்ச்சி...!! - இடும்பன் கோயிலில் வெள்ளி வேல் மாயம்... 142 கிராம் தங்கமும் திருடு போனதால் பரபரப்பு...!

இடும்பன் கோயிலில் 142 கிராம் தங்கம், வெள்ளி வேல் மாயம். எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் போலீசார் விசாரணை – முன்னாள், தற்போதைய ஊழியர்களிடம் விசாரணை

பழனி இடும்பன் கோயிலில் 142 கிராம் தங்கம் மற்றும் 52 கிராம் எடையுள்ள வெள்ளி வேல் மாயமானதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பழனி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை மற்றும் காவடி பக்தர்கள் இடும்பன் குளத்தில் நீராடிவிட்டு இடும்பனை வழிபட்டுச் செல்வது வழக்கம். இக்கோயிலில் பக்தர்கள் தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கப் பணத்தை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோயிலில் இருந்த 142 கிராம் தங்கம் மற்றும் 52 கிராம் எடையுள்ள வெள்ளி வேல் மாயமானதாகக் கூறி, கோயில் இணை ஆணையர் நரசிம்மன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பழனி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதையும் படிங்க: பழனி நில மோசடி வழக்கு... நிலத்தை வாங்கியதாக கைதானவர்களுக்கு இடியை இறக்கிய நீதிமன்றம்...!

ஆனால், மாயமான நகைகள் தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, பழனியைச் சேர்ந்த கோயில் அறங்காவலர் ராஜா, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாயமான நகைகளை விரைந்து கண்டுபிடித்து, விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் ஆய்வாளர் தங்கமுனுசாமி மற்றும் போலீசார் இன்று இடும்பன் கோயிலில் விசாரணை மேற்கொண்டனர். கோயிலில் ஏற்கனவே பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள் மற்றும் தற்போது பணியில் உள்ள ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், கோயிலில் முன்னாள் இணை ஆணையராக பணியாற்றிய விமலா மற்றும் தற்போது இணை ஆணையராக பணியாற்றி வரும் நரசிம்மன் உள்ளிட்டோரும் விசாரணைக்கு ஆஜராகி தங்களது தரப்பு விளக்கங்களை அளித்து வருகின்றனர்.

கோயில் நகைகள் மாயமான விவகாரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக இடும்பன் கோயிலுக்கு வந்து விசாரணை மேற்கொண்ட சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாயமான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் எவ்வாறு மாயமானது, இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: எம்.எல்.ஏ. இல்லாத நேரத்தில் இப்படியா?... அரசு கட்டிடத்தை கட்சி ஆபீஸாக மாற்றிய தவெக நிர்வாகி... பெண்களுடன் அட்ராசிட்டி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share