×
 

பழனி கோவிலில் இதற்கெல்லாம் கட்டணம் உயருகிறதா..?? பக்தர்களிடம் கருத்து கேட்பு..!!

பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்பு தொடர்பான அறிவிப்பு ஒன்று கோவில் தலைமை அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தம் மற்றும் தங்கரத புறப்பாட்டு சேவைக்கான கட்டணங்களை உயர்த்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகளை பெறுவதற்கான அறிவிப்பை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்கும் பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் இந்த எண்ணிக்கை பல லட்சங்களை எட்டுகிறது. இங்கு தரப்படும் பஞ்சாமிர்தம், பக்தர்களிடையே மிகவும் பிரபலமான பிரசாதமாக இருந்து வருகிறது. புவியியல் அடையாளச் சான்று (GI Tag) பெற்ற இந்த பஞ்சாமிர்தம், கோவில் மலைப்பகுதி மற்றும் அடிவார விற்பனை மையங்கள் மூலம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது அரை கிலோ டின் பஞ்சாமிர்தம் ரூ.45 மற்றும் ரூ.40 என்ற இரு வகை விலைகளிலும், 200 கிராம் பஞ்சாமிர்தம் ரூ.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் சமீப காலமாக பஞ்சாமிர்தம் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் வாழைப்பழம், வெல்லம், நெய், தேன் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், விற்பனை விலையை திருத்தியமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதையும் படிங்க: டிரம்ப்-க்கு 80வது ஹேப்பி பர்த்டே..!! வெள்ளை மாளிகையில் முதல் முறையாக UFC போட்டி..!!

அதன்படி ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த அரை கிலோ டின் பஞ்சாமிர்தம் ரூ.60 ஆகவும், ரூ.40-க்கு விற்கப்பட்டு வந்த வகை ரூ.50 ஆகவும், ரூ.20-க்கு வழங்கப்பட்ட 200 கிராம் பஞ்சாமிர்தம் ரூ.30 ஆகவும் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு தொடர்பான கருத்து கேட்பு அறிவிப்பு கோவில் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக ஒட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து யாருக்கேனும் கருத்துகள் அல்லது ஆட்சேபனைகள் இருந்தால் அவற்றை ஜூலை 11-ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், பழனி மலைக்கோவிலில் தினசரி இரவு நடைபெறும் தங்கரத புறப்பாட்டு சேவைக்கான கட்டணத்தையும் உயர்த்த கோவில் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. பக்தர்கள் தங்கரதத்தை இழுத்து வழிபடும் இந்த சிறப்பு சேவைக்காக தற்போது ரூ.2,000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு பரிவட்டம், முருகன் படம், எவர்சில்வர் குடம் உள்ளிட்ட பல்வேறு நினைவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் மாற்றமின்றி இருந்து வரும் இந்த கட்டணத்தை, தற்போதைய விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு ரூ.2,500 ஆக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது கருத்துகள் அல்லது ஆட்சேபனைகளை ஜூலை 7-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கோவில் நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: கேரளாவில் பெண்களுக்கு ஃப்ரீ பஸ்..!! இன்று முதல் அமலுக்கு வந்தாச்சு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share