×
 

பாம்பின் நிழலில் தவளை போல் மக்கள் நிலை! தவெக அரசை சாடிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

வெயிலின் கொடுமை தாங்காமல் தப்பித்துச் சென்று பாம்பின் நிழலில் அடைக்கலம் புகுந்த தவளையின் நிலையைப் போல மக்கள் நிலை மாறியுள்ளது என  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, மின்தடைப் பிரச்சினைகள் மற்றும் நிர்வாகத் தேக்கம் ஆகியவற்றைக் கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (தமிழக வெற்றி கழகம்) அரசை அவர் மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார்.

தமிழகத்தில் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை, மக்கள் படும் துயரங்களும் தீரவில்லை. மாநிலத்தின் ஒரு பக்கம் கடுமையான மின்சாரத் துண்டிப்பு காரணமாக மக்கள் வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் பாலியல் குற்றங்களும், லாக்-அப் மரணங்களுமே தவெக ஆட்சியின் சாதனையாக உள்ளது. ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றால் அவர்களுக்கு ஒரு சட்டம், சாமான்யர்களுக்கு ஒரு சட்டம் என்ற அவலநிலை நீடிக்கிறது.

ஈரோடு பவானியிலும், சேலத்திலும் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்தவர்கள் போதைப்பொருட்கள் வைத்திருந்ததாகக் கூறி அவர்களைக் கைது செய்துவிட்டு, பின்னர் ஆளும் கட்சி என்ற செல்வாக்கால் உடனே விடுவித்துவிட்டார்கள். ஆனால், நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மனை அடித்துக் கொடூரமாகக் கொன்றுவிட்டார்கள். இந்த லாக்-அப் மரணம் குறித்து இதுவரை முதலமைச்சர் விஜய் பத்திரிகையாளர்களைச் சந்தித்து ஏதேனும் விளக்கம் கொடுத்திருக்கிறாரா? இல்லை.

இதையும் படிங்க: அதிமுகவை யாரிடமாவது கொடுத்துவிடுங்கள் !எடப்பாடி பழனிசாமியை சாடிய அமைச்சர் நிர்மல்குமார்!

தொடர்ந்து தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்துப் பேசிய அவர், நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கிறதா இல்லையா என்றே தெரியாத அளவிற்கு, அதிகாரிகள் தான் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பல இடங்களில் சாலை வசதி, தெருவிளக்கு, மின்சார வசதி, குடிநீர் போன்ற அடிப்படை உள்கட்டமைப்புப் பணிகளுக்கு இன்னும் டெண்டர் கூடப் போடப்படவில்லை. மழைக்காலம் வருவதற்கு முன்னதாக இந்தப் பணிகளை இவர்களால் முடிக்க முடியாது. தூங்கிக் கொண்டே இருக்கும் இந்த விஜய் அரசு, தூக்கத்திலிருந்து எப்போது விழித்துக் கொள்ளும் என்பதுதான் மக்களின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது என்று சாடினார்.

தமிழக மக்களின் தற்போதைய நிலையை ஒரு பழமொழி மூலம் விளக்கிய ஜெயக்குமார், வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் தப்பித்து ஓடிச் சென்று, அறியாமையால் படம் எடுத்து ஆடும் பாம்பின் நிழலில் அடைக்கலம் புகுந்த ஒரு பரிதாபகரமான தவளையின் நிலையைப் போலத் தான், இன்று தவெக ஆட்சியில் தமிழக மக்களின் நிலை அந்தோ பரிதாபமாக மாறியுள்ளது என்று மிக உருக்கமாகத் தெரிவித்தார்.

 

இதையும் படிங்க: கரிசல் மண்ணின் குரல் ஒடுங்கியது! மூத்த எழுத்தாளர் பூமணி மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share