×
 

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமை..!! திரும்ப பெற முதல்வர் விஜய் வலியுறுத்தல்..!!

பெட்ரோல் விலை உயர்வு ஏழை, எளிய மக்களின் வாங்கும் திறனையும் பாதிப்படையச் செய்யும் என்று முதல் அமைச்சர் விஜய் கூறியுள்ளார்.

மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தியிருப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், இந்த நடவடிக்கை ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும் என்று எச்சரித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலையை லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் ரூ.3 மற்றும் டீசல் ரூ.3 என்ற அளவில் உயர்த்தியுள்ளன. இது முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல” என்று தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறையும் போது அதற்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்காமல், நிறுவனங்கள் லாபத்தை மட்டும் அள்ளிக் கொள்வதாகவும் அவர் விமர்சித்தார்.

குறிப்பாக, ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகு இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று சுட்டிக்காட்டிய முதலமைச்சர், இது மக்களின் பொருளாதார நிலையை மோசமாக பாதிக்கும் என்று கூறினார். இருசக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் சிற்றுந்துகளை அதிகம் நம்பியிருக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மாதச் செலவு கணிசமாக அதிகரிக்கும். 

இதையும் படிங்க: மோடி அரசின் தவறுக்கு பொதுமக்கள் விலை கொடுக்கின்றனர்..!! பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ராகுல் காந்தி கண்டனம்..!!

இதனால் அவர்களின் மாத வருமானத்தில் பெரும் பங்கு எரிபொருள் செலவாக வீணாகும் நிலை உருவாகும். மேலும், வங்கிக் கடன் பெற்று வாடகை வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் கூடுதல் நிதிச் சுமையை சுமக்க நேரிடும். விலை உயர்வு காரணமாக வாடகை வாகனங்களின் கட்டணம் உயர வாய்ப்புள்ளது. இது அன்றாடப் பொருட்களான காய்கறி, பால், மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலையை மேலும் உயர்த்தி, பொதுமக்களின் வாங்கும் திறனை பலவீனப்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விலை உயர்வு விவசாயம், போக்குவரத்து, சிறு தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் எதிரொலிக்கும். ஏற்கெனவே பணவீக்க அழுத்தத்தில் தவிக்கும் மக்களுக்கு இது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்களும் கவலை தெரிவிக்கின்றனர். மத்திய அரசு மக்கள் நலன் கருதி இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நடவடிக்கை தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பலையை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படாவிட்டால், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மத்திய அரசு இந்த விஷயத்தில் உடனடி தலையீடு செய்து விலையை குறைக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: 717 டாஸ்மாக் கடைகள் மூடல்! முதலமைச்சர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share