களைகட்டிய சோழதேசம்! பிரதமர் கொண்டு வரும் முக்கிய பொருள் என்ன தெரியுமா?
பிரதமர் மோடியின் வருகைக்காக கங்கைகொண்ட சோழபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
கங்கைகொண்ட சோழபுரம், தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர், சோழப் பேரரசின் மாமன்னர் இராஜேந்திர சோழனின் தலைநகராக விளங்கியது. இந்த நகரத்தில் இன்று நடைபெறவுள்ள ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க உள்ளார். இந்த வருகைக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.
இந்த ஆண்டு, முதலாம் இராஜேந்திர சோழனின் 1000-வது பிறந்தநாள், தென்கிழக்கு ஆசியாவில் அவரது கடல்சார் பயணத்தின் ஆயிரமாவது ஆண்டு, மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலின் கட்டுமானத் தொடக்கத்தை நினைவுகூரும் வகையில், மத்திய கலாச்சார அமைச்சகத்தின் ஆதரவுடன் ஜூலை 23 முதல் 27 ஆம் தேதி (இன்று) வரை ஆடி திருவாதிரை விழா ஐந்து நாள் கொண்டாட்டமாக நடைபெறுகிறது. இதன் நிறைவு நிகழ்ச்சி இன்று நடைபெறும் நிலையில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். காலை 11 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரத்திற்குச் சென்று, நண்பகல் 12 மணியளவில் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் பங்கேற்கிறார்.
பின்னர் பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்கிறார். வாரணாசியில் இருந்து பிரதமர் மோடி கொண்டு வரும் கங்கை நீரைப் பயன்படுத்தி பிரகதீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. கோயிலில் சில நிமிடங்கள் தியானம் செய்யவும், கோயில் சிற்பங்களையும், இந்தியத் தொல்லியல் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட புகைப்படக் கண்காட்சியையும் பார்வையிடுகிறார். விழாவின் முக்கிய நிகழ்வாக, பிரதமர் மோடி இராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். இது சோழப் பேரரசின் பங்களிப்பைப் பறைசாற்றுவதற்கு முக்கியமான மைல்கல்.
இதையும் படிங்க: திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி... அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு...!
இதனிடையே, தஞ்சாவூரில் உள்ள தென் மண்டல கலாச்சார மையத்தின் ஆதரவுடன், தேவாரம் திருமுறை பயிற்சி பெற்ற மாணவர்களால் பாடப்படுகிறது. கலாஷேத்ரா கலைஞர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், பாரம்பரிய ஓதுவார்களின் தேவாரப் பாடல்களும் இடம்பெறுகின்றன.
பத்மபூஷன் இளையராஜா மற்றும் அவரது குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது, இது விழாவிற்கு மேலும் பொலிவு சேர்க்கிறது. பிரதமரின் வருகையை முன்னிட்டு, திருச்சி விமான நிலையம் முதல் கங்கைகொண்ட சோழபுரம் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: வெள்ளை வேட்டி சட்டையில் கலக்கலாக வந்த பிரதமர் மோடி..!! புதிய முனையக் கட்டடம் திறந்து வைப்பு..!