MLA அருள் இனி பாமக கொறடா இல்ல... சபாநாயகரிடம் முறையிட்ட அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள்!
பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய சட்டமன்ற கொறடாவாக மயிலம் எம்எல்ஏ சிவக்குமார் நியமிக்கப்பட்டதாக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.
அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில் இருவரும் இரு துருவங்களாக மாறிவிட்டனர். கட்சியை த் தூண்டாடி தனித்தனியாக ஆலோசனைக் கூட்டங்களையும் பொதுக்குழு கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இதில் குறிப்பாக பாமக கௌரவ தலைவர் ஜி கே மணி மற்றும் எம்எல்ஏ அருள் மீது அன்புமணி பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார்.
சமீபத்தில் பாமக எம்எல்ஏ அருள் அளித்த பேட்டி ஒன்றில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தான் 45 ஆண்டு காலமாக தொடர்ந்து நியமனங்களை வழங்கி வருகிறார் என கூறினார். கட்சியின் தலைவர் முதல் கிளைச் செயலாளர் வரை பொறுப்பாளர்களை நியமிக்க கூடிய அதிகாரம் படைத்த தலைவர் ராமதாஸ் தான் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: #BREAKING: பாமகவில் இருந்து அருள் நீக்கம்... அன்புமணி அதிரடி உத்தரவு... அதிருப்தியில் தொண்டர்கள்
இந்த நிலையில், 12 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக எம்எல்ஏ அருளுக்கு அன்புமணி ராமதாஸ் கெடு விதித்து இருந்தார். இந்த நிலையில் அருளை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். கட்சி தலைமை குறித்து அவதூறு பரப்பி வருவதால் அருள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பாமக அருளுடன் கட்சியினர் எவரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் அன்புமணி திட்டவட்டமாக தெரிவித்தார்.
தான் என்ன தவறு செய்து விட்டேன் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமக எம்எல்ஏ அருள் கேள்வி எழுப்பினார். தந்தையும் மகனும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைத்ததால் கட்சியில் இருந்து தூக்கி உள்ளார்களா என்று கேள்வி எழுப்பிய அவர், என்றும் எங்கள் சின்னவர் அவர்தான் என்றும் ராமதாஸிற்கு பிறகு அன்புமணி தான் எனவும் தெரிவித்தார். ராமதாசை விட்டு வந்து விட்டால் நான் நல்லவனாகி விடுவேனா என்றும் ராமதாஸ் கூறினால் அன்புமணியை சந்திப்பேன் எனவும் அருள் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அருளை கட்சியிலிருந்து நீக்கக்கோரி, அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலாளரிடம் மனு அளித்தனர். தங்களது மனுவை அளித்த பிறகு, வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து அருள் நீக்கப்பட்டதாகவும், தேவையான மாற்றங்களை செய்யுமாறு சபாநாயகரிடம் முறையிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் பாமகவின் சட்டமன்ற கொறடாவாக மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: பதவிக்காக பெத்த அப்பனையே விட்டு போறாரு.. அன்புமணியை விளாசிய MLA அருள்..!