பாமக இளைஞரணி பொதுக்குழு! சென்னையில் பிப். 10-ல் அன்புமணி பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டம்!
பிப்ரவரி 10-ம் தேதி கணேஷ்குமார் தலைமையில் சென்னையில் கூட்டம் .தேர்தல் வியூகம் மற்றும் ஆண்டு செயல் திட்டம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க பட உள்ளன.
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி வளர்ச்சி மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்க, அக்கட்சியின் இளைஞரணிப் பொதுக்குழுக்கூட்டம் வரும் பிப்ரவரி 10-ம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்தக்கூட்டம், அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
பாமக இளைஞரணித் தலைவர் கணேஷ்குமார் தலைமையில் இந்தப் பொதுக்குழு நடைபெறுகிறது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, இளைஞரணி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கவுள்ளார். 2026-ஆம் ஆண்டிற்கான கட்சியின் இளைஞரணி வளர்ச்சிப் பணிகள், மாவட்ட வாரியாகப் புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல் மற்றும் ஆண்டு முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டிய மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், இளைஞர்களைப் பெருமளவில் கட்சிப் பணிகளில் ஈடுபடுத்துவது மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகக் கட்சியின் கொள்கைகளைக் கொண்டு செல்வது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: கூட்டணி கணக்குகள் தீவிரம்! பியூஷ் கோயலை சந்திக்கிறார் அன்புமணி!
அன்புமணி ராமதாஸ் தலைமையிலான இந்தப் பொதுக்குழு அறிவிப்பால், பாமக இளைஞரணித் தொண்டர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். தமிழகம் முழுவதிலும் இருந்து இளைஞரணி முக்கிய நிர்வாகிகள் இந்தப் பொதுக்குழுவில் பங்கேற்கச் சென்னைக்கு வருகை தர உள்ளனர். கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு இந்தக்கூட்டம் ஒரு வலுவான அடித்தளமாக அமையும் என அன்புமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “அடிப்படை உறுப்பினரே இல்லை, பிறகு எப்படி தலைவர்?” அன்புமணிக்கு எதிராக கொதிக்கும் டாக்டர் ராமதாஸ்!